மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குக் கீழ் இயங்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தனது டோல்-ஆபரேட்-டிரான்ஸ்பர் (TOT) திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள NH 38 சாலையின் 124 கிலோமீட்டர் நீளமுள்ள பகுதியை நிர்வகிக்கும் உரிமையை அதானி ரோடு டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.
இத்திட்டத்திற்காக ஏலம் நடத்தப்பட்டதில் சுமார் ரூ.1,692 கோடி தொகையைக் குறிப்பிட்டு, அதிகபட்ச ஏல தொகையை முன்வைத்து அதானி நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை வென்றுள்ளது. NH 38 சாலை என்பது வேலூர் முதல் தூத்துக்குடி வரையில் செல்லும் 601 கிலோமீட்டர் கொண்ட நெடுஞ்சாலை.

இந்த ஒப்பந்தத்திற்காக அதானி குழுமம் மட்டும் அல்லாமல் மேலும் 4 நிறுவனங்கள் போட்டிப்போட்டது. இதில் ஐ.ஆர்.பி. இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்பர்ஸ் (ரூ.1,485 கோடி), எபிக் கன்செஷன்ஸ் (ரூ.1,152 கோடி) மற்றும் பிரகாஷ் அஸ்ஃபால்டிங்ஸ் & டோல் ஹைவேஸ் (ரூ.876 கோடி) ஆகிய நிறுவனங்கள் அடக்கம்.
NH 38 சாலையில் மதுரை பகுதியில் அமைந்துள்ள திருச்சி-துவரங்குறிச்சி நான்கு வழிச்சாலையின் நிர்வாகம் செய்யும் உரிமைக்கான ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. NHAI நிர்வாக குழுவின் ஒப்புதலுக்கு பின்னர் அதானி சாலை போக்குவரத்து நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தத்தை வழங்க உள்ளது.
TOT திட்டத்தின் கீழ், தேசிய நெடுஞ்சாலை சொத்துக்கள் தனியார் நிறுவனங்களுக்குக் குத்தகைக்கு விடப்படுகின்றன. 15 முதல் 30 ஆண்டுகளுக்கு சாலைகளை இயக்க, பராமரிக்க மற்றும் கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கப்படுகிறது. அதற்கு ஈடாக, உரிமை பெற்ற நிறுவனம் அரசுக்கு ஒரு முறை முன்பணம் செலுத்த வேண்டும்.
TOT திட்டத்தின் மூலம் சுமார் 4,912 கிலோமீட்டர் நீளமுள்ள மொத்தம் 86 தேசிய நெடுஞ்சாலை பிரிவுகளை NHAI ஏலம் மூலம் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்த திருச்சி-துவரங்குறிச்சி ஏல ஒப்பந்தத்திற்கு முன்னதாக, NHAI ஐந்து தொகுப்புகளை (11, 12, 13, 14 மற்றும் 16) ஏலம் மூலம் தனியாருக்குக் கொடுக்கப்பட்டு வெற்றிகரமாக நிதி ஈட்டியுள்ளது. நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் மேலும் மூன்று தொகுப்புகளை ஏலம் விட NHAI திட்டமிட்டுள்ளது.
இந்த ஏலம் மூலம் நடப்பு நிதியாண்டில் ரூ.54,000 கோடி நிதியை TOT திட்டத்தின் மூலம் திரட்ட NHAI இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த திட்டம் மூலம் தேசிய நெடுஞ்சாலை அமைப்பு கடன் சுமையைக் குறைக்கவும், புதிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு நிதியுதவி செய்யவும் முடிவு செய்துள்ளது.
டிசம்பர் 2024 இறுதியில் NHAI-ன் கடன் சுமை சுமார் ரூ.2.76 லட்சம் கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அதானி ரோடு டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் இந்த ஏல முயற்சி இந்தியச் சாலை கட்டமைப்பு துறையில் தனியார்த் துறையின் பங்களிப்பு அதிகரித்து வருவதைக் காட்டுகிறது.


Click it and Unblock the Notifications