இந்தியாவின் மிக முக்கியத் தொழிலதிபர்களில் ஒருவரான கௌதம் அதானி தலைமையில் பல துறையில் வர்த்தகம் செய்து வரும் அதானி குழுமம், சமீபத்தில் பல முக்கியத் துறைகளில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருவது மட்டும் அல்லாமல் வர்த்தக வளர்ச்சிக்காகப் பல வழிகளில் முதலீட்டைத் திரட்டி வருகிறது.
இதன் அடிப்படையில் அதானி குழுமத்தின் FMCG நிறுவனமான அதானி வில்மார் நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் பட்டியலிடத் திட்டமிடப்பட்டு வருகிறது.
அதானி வில்மார் துவக்கம்
1999ஆம் ஆண்டு அதானி குழுமம், சிங்கப்பூர் இண்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்து உருவாக்கிய நிறுவனம் தான் இந்த அதானி வில்மார். ஆசியாவின் மிக முக்கியமான விவசாயத் துறை நிறுவனமான வில்மார் இந்தியாவில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டபோது அதானி குழுமத்துடன் கூட்டணி சேர்ந்து வர்த்தகத்தைத் துவங்கியது.
அதானி வில்மார் வர்த்தகம்
இன்றளவில் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நுகர்வோர் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனமான அதானி வில்மார் சமையல் எண்ணெய், உணவுப் பொருட்கள், கோதுமை மாவு, ரவை, கடலை மாவு, அரிசி, சோயா, பருப்பு வகைகள், சோ பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இதுமட்டும் அல்லாமல் வெளிநாடுகளுக்கும் பல இந்திய தயாரிப்புகளை ஏற்றுமதி செய்து வருகிறது அதானி வில்மார்.
5000 கோடி ரூபாய் இலக்கு
இந்நிலையில் இந்நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடுவதன் மூலம் சுமார் 5000 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடாகத் திரட்ட இலக்க நிர்ணயம் செய்துள்ளது. இதற்காக அதானி வில்மார் நிறுவனம் ஜேபி மோர்கன், கோட்டாக் மஹிந்திரா வங்கி ஆகியவற்றை முதலீடு வங்கிகளாக நிர்ணயம் செய்துள்ளது.
பார்சூன் பிராண்ட்
இந்தியாவில் பார்சூன் பிராண்ட் எண்ணெய் சுமார் 20 சதவீத வர்த்தகச் சந்தையைக் கொண்டுள்ளது மட்டும் அல்லாமல் சுமார் 19 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு மிகப்பெரிய வர்த்தகத்தைக் கொண்டு உள்ளது. மேலும் இந்த நிறுவனம் ரீடைல் முதலீட்டாளர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.