ஆதித்யா பிர்லா குழுமத்தின் பெயரையும் புகழையும் காப்பாற்றிக் கொண்டு இருக்கும் முக்கிய நிறுவனங்களில் ஒன்று அல்ட்ரா டெக் சிமெண்ட். இந்த அல்ட்ரா டெக் சிமெண்ட் கம்பெனியின் செப்டம்பர் 2020 காலாண்டு முடிவுகள் நேற்று வெளியானது.
உலகின் முன்னணி சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்களில் அல்ட்ரா டெக் சிமெண்ட் கம்பெனியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் சிமெண்ட், வொயிட் சிமெண்ட், பட்டி என பல பொருட்களைத் தயாரிக்கிறார்கள்.
இந்த பெரு நிறுவனத்தின் நிகர லாபம், இந்த செப்டம்பர் 2020 காலாண்டில் 1,234 கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறதாம். கடந்த செப்டம்பர் 2019 கலாண்டில், அல்ட்ராடெக் சிமெண்ட் கம்பெனியின் நிகர லாபம் 579 கோடி ரூபாயாக இருந்தது. ஆக தற்போது 113 சதவிகிதம் அல்ட்ரா டெக் சிமெண்ட் கம்பெனியின் நிகர லாபம் அதிகரித்து இருக்கிறது.
அல்ட்ரா டெக் சிமெண்ட் கம்பெனியின் விற்பனை, இந்த செப்டம்பர் 2020 காலாண்டில் 10,231 கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறதாம். இது கடந்த செப்டம்பர் 2019 காலாண்டை விட 7.8 சதவிகிதம் அதிகம்.
அல்ட்ரா டெக் சிமெண்ட் கம்பெனியின் செயல்பாட்டு வரம்பு 27 சதவிகிதமாக இருக்கிறதாம். இதற்கு இழுத்துப் பிடித்த செலவீனங்கள் மற்றும் வருவாய் அதிகரிப்பு என இரண்டுமே முக்கிய காரணம் என்கிறார்கள்.
குறிப்பாக, அல்ட்ரா டெக் சிமெண்ட் தன் நிகர கடன்களை, இந்த செப்டம்பர் 2020 காலாண்டிலும் கணிசமாக குறைத்து இருக்கிறார்களாம். 2020 - 21 நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் (ஏப்ரல் 2020 - செப்டம்பர் 2020) 4,728 கோடி ரூபாய் கடன்களைக் குறைத்து இருக்கிறார்களாம்.
கடந்த ஜூன் 2020 காலாண்டில் மட்டும் 2,209 கோடி ரூபாய் கடனை குறைத்து இருக்கிறார்கள் என்பதும் நினைவு கூறத்தக்கது.
அல்ட்ரா டெக் சிமெண்ட் கம்பெனி, தன்னுடைய ஒடிஸா, பீகார், மேற்கு வங்கத்தில் சிமெண்ட் ஆலை பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டு இருப்பதாகவும் சொல்லி இருக்கிறது. வரும் 2021 - 2022 நிதி ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரலாம் எனவும் சொல்லி இருக்கிறது கம்பெனி தரப்பு.