சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது பலரது கனவு. சிலர் தங்கள் ஓய்வு காலத்தில் வீடு வாங்குவார்கள். சிலர் தங்களது இளம் வயதிலேயே வாங்கிவிடுவார்கள்.
பலர் இளம் வயதில் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது குறித்து எந்த முடிவையும் எடுப்பதில்லை. ஆனால் இளம் வயதில் வீடு வாங்குவது குறித்து முடிவெடுத்தால் பல நன்மைகள் உண்டு. அது பற்றி இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
குறைந்த ஈ.எம்.ஐ
20-25 வயதில் வீடு வாங்க திட்டமிட்டால் எளிதாக 20 வருட தவணையில் வீடு வாங்க முடியும். திருமணம் ஆகாமல், குழந்தை இல்லாமல் இருக்கும்பட்சத்தில் செலவுகள் குறைவாக இருக்கும். எனவே ஈ.எம்.ஐ செலுத்துவதும் எளிமையாக இருக்கும். கூடுதலாகவும் செலுத்த முடியும்.
வரி நன்மைகள்
கடன் பெற்று வீடு வாங்கும் போது அதற்கான வட்டி தொகைக்கு வரி விலக்கு பெற முடியும். எனவே இளம் வயதில் அதிக சம்பளம் வாங்குபவர்கள் வீடு வாங்கத் திட்டமிடுவதன் மூலம் பல வரி நன்மைகளைப் பெற முடியும். கட்டப்படும் வீடு வாங்கும் போது கட்டி முடிப்பதற்கு முந்தைய வட்டிக்கு தள்ளுபடியையும் பெற முடியும்.
வாடகை சேமிப்பு
இளம் வயதில் வீடு வாங்கும் போது நீண்ட கால தவணை முறையில் கடனை செலுத்தலாம். எனவே தவணை குறைவாக இருக்கும், வாடகை செலுத்துவது மிச்சமாகும்.
சொத்து
வீடு வாங்குகிறீர்கள் என்றால் அது ஒரு சொத்து. இளம் வயதில் சொத்து வாங்கிவிட்டால், அதன் மதிப்பு 15 அல்லது 20 வருடங்களுக்குப் பிறகு பல மதிப்பு அதிகரித்து இருக்கும். விற்கும் போது நல்ல லாபமும் கிடைக்கலாம்.
தீமைகள் மற்றும் அபாயங்கள்
இளம் வயதில் ஒருவர் வீடு வாங்குகிறார் என்றால் அவர் ஒரு நிலையான வேலையில் இருக்க வேண்டும். எப்போது வேண்டுமானாலும் வேலை போகலாம் என இருப்பவர்கள் இப்படிப்பட்ட முதலீடுகளைத் தொடரக்கூடாது. கொரோனா போன்ற ஏதேனும் தொற்று வந்தால் வருமானம் இல்லாமல் போனால் தவணையைக் கட்டுவதில் சிரமம் ஏற்படும்.
குடிபெயர்வு
வீட்டை வாங்கிய பிறகு நிரந்தரமாக வெளியூர் செல்ல நேரிட்டால், சொத்தை வாங்கிய பிறகு அது பயன்படாமல் போக வாய்ப்புகள் உண்டு. இது தவணையைத் தாண்டி வருமானம் கிடைப்பவர்களுக்குப் பிரச்சனையாக இருக்காது.
நிம்மதி
சிறு வயதில் பெரும் தொகையைக் கடனாக பெரும் போது அது உங்களை ஓய்வு எடுக்கவிடாது. தொடர்ந்து அந்த தவணையைச் செலுத்த ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.