சென்னை: ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து சம்பவம் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சோகமான சம்பவம் ரயில்வே பயணிகள் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது என்று தான் சொல்ல வேண்டும். இந்திய ரயில்வே ஒரு பயணிக்கு ரூ. 45 பைசா என்ற குறைந்த கட்டணத்தில் பயணக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. அதன் விரிவான விவரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
IRCTC இ-டிக்கெட்டுகளில் பயணக் காப்பீட்டை ஒரு சிறிய விலையில் சேவையாக வழங்குகிறது. முன்பதிவு செய்யும் போது பயணிகள், அதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் டிக்கெட் முன்பதிவு செய்து முடித்தவுடன் உங்களால் காப்பீட்டைத் தேர்வு செய்ய முடியாது என்பதை நினைவில் கொள்ளவும். இருப்பினும், IRCTC மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, பயணக் காப்பீடு வாங்குவது என்பது கட்டாயம் இல்லை. தேவைப்பட்டால் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.

IRCTC இணையதளத்தின்படி, 2024ஆம் ஆண்டு முதல் குறைந்தபட்ச காப்பீட்டில், வெறும் ரூ. 45 பைசாவுக்கு, ரூ 10 லட்சம் வரை காப்பீட்டு தொகை பெற முடியும்.
ரயில்வே துறை வழங்கும் இந்த சுகாதார காப்பீடு முன்பதிவு செய்யப்பட்ட பயண சீட்டுகளுக்கும், RAC டிக்கெட்டுகளுக்கும் கிடைக்கிறது. ஆனால் நீங்கள் ரயில்வே நிலையங்களில் கவுண்டர்களில் வாங்கும் டிக்கெட்களுக்கு, இந்த காப்பீடு செல்லுபடி ஆகாது. அதேபோல குழந்தைகள் என்றால் அரை டிக்கெட் எடுப்பது வழக்கம் தான். இது போன்ற குழந்தைகளுக்கும் இந்த காப்பீடு செல்லுபடி ஆகாது.
IRCTC இணையதளத்தின் கீழ் காப்பீட்டின் நன்மைகள்: பயணத்தின் போது தற்செயலாக காயம் ஏற்பட்டு, காயம் காரணமாக காப்பீடு செய்யப்பட்ட நபர் இறந்து விட்டால் அல்லது விபத்து நடந்த நாளிலிருந்து 12 மாதங்களுக்குள் மரணம் ஏற்பட்டால் காப்பீடு செய்யப்பட்ட தொகையில் 100 % வழங்கப்படும்
அதேபோல ரயில் பயணத்தின் போது காப்பீடு செய்யப்பட்ட நபருக்கு விபத்து ஏற்பட்டு அந்த விபத்தின் காரணமாக 12 மாதங்களுக்குள் நிரந்தர ஊனம் ஏற்பட்டால் அவர் காப்பீடு செய்யப்பட்ட தொகையில் 100 % பெற முடியும்.
இந்த பயணக் காப்பீடு, எது போன்ற விபத்து ஏற்படும்போது பொருந்தும் என்று IRCTC அதிகாரபூர்வ இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது. உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் நீங்கள் அதனை பார்வையிடலாம்.
எவ்வாறு காப்பீட்டை பெறுவது?: காப்பீடு செய்யப்பட்ட நபர் அல்லது அவர்களின் நியமனதாரர் அல்லது சட்டப்பூர்வ வாரிசு விபத்து ஏற்பட்ட நாளிலிருந்து 4 மாதங்களுக்குள் அருகிலுள்ள காப்பீட்டு அலுவலகத்தில் விரிவான எழுத்துப்பூர்வ அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
தேவைப்படும் ஆவணங்கள்: காப்பீடு செய்யப்பட்டவர் இறந்துவிட்டால், நாமினி அல்லது சட்டப்பூர்வ வாரிசு கையெழுத்திட்டு பூர்த்தி செய்யப்பட்ட உரிமை கோரல் படிவம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும், ரயில் விபத்து சம்பவத்தை உறுதிப்படுத்தும், ரயில்வே ஆணையத்தின் அறிக்கை, இறந்ததாக அறிவிக்கப்பட்ட பயணியின் விவரங்களைக் கொண்ட ரயில்வே ஆணையத்தின் அறிக்கை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவை தேவைப்படலாம்.


Click it and Unblock the Notifications