பிர்லாசாப்ட் நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த 18 மாதங்களில் 600% ஏற்றம் கண்டுள்ளது, இதன் மூலம் முதலீட்டாளர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இவ்வளவு ஏற்றம் கண்டுள்ள நிலையில், முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை இந்த பங்கில் குறைத்துள்ளனர்.
எனினும் இந்த பங்கு விலையானது இன்னும் ஏற்றம் காணலாம் என்று கூறுகின்றனர். இது இன்னும் 39% வரை ஏற்றம் காணலாம் என்றும் கூறுகின்றனர்.
தரகு நிறுவனங்கள் இலக்கு விலை
இது குறித்து எடில்வைஸ் நிறுவனம் அதன் இலக்கு விலையை 568 ரூபாயாகவும், ஆனந்த ரதி பைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனம் அதன் இலக்கு விலையை 550 ரூபாயாகவும், எம்கே குளோபல் நிறுவனம் அதன் இலக்கு விலையை 520 ரூபாயினையும், ஐசிஐசிஐ டைரக்ட் நிறுவனம் அதன் இலக்கு விலை 475 ரூபாயாகவும் நிர்ணயம் செய்துள்ளனர். இதற்கிடையில் இன்று இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 410 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது.
செப்டம்பர் காலாண்டில் லாபம்
கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஆண்டினை காட்டிலும், 49.2% அதிகரித்து, 103.1 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே முந்தைய செப்டம்பர் காலாண்டில் 69.1 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் விகிதமானது கடந்த ஆண்டினை காட்டிலும், 18% அதிகரித்து 1,011.7 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முன்பு 857.5 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடன் இல்லா நிறுவனம்
பிர்லாசாப்ட் நிறுவனம் அதன் டிஜிட்டல் வணிகத்தில், CRM, டேட்டா அனலிடிக்ஸ், ஆப் டெவலப்மெண்ட் உள்ளிட்ட பலவற்றிலும் மிக வலுவாக உள்ளது. குறிப்பாக உற்பத்தி, வங்கி மற்றும் நிதி நிறுவன துறை, எனர்ஜி, பயன்பாடு மற்றும் லைஃப்சயின்ஸ் உள்ளிட்ட துறைகளில் தனது சேவையினை வழங்கி வருகின்றது. கடனற்ற இந்த நிறுவனம், நல்ல இரட்டை இலக்க வருவாயை கொண்டுள்ளது.
பங்கு விலை அதிகரிக்கலாம்
வலுவான வருவாயினை கண்டுள்ள நிலையில், அதன் பங்கு விகிதமும் மேற்கொண்டு வளர்ச்சி காணலாம் என ஐசிஐசிஐ டைரக்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் தான் 600% அதிகரித்து இருந்தாலும், இந்த பங்கின் விலையானது மேற்கொண்டு அதிகரிக்கலாம் என்றே பல தரகு நிறுவனங்களும் கணித்துள்ளன.