வல்லரசு நாடுகளில் ஒன்றான சீனாவில் பல பகுதிகளில் மின்சாரத் தட்டுப்பாடு அதிகமாக இருக்கும் காரணத்தால் பல ஆயிரம் தொழிற்சாலை மூடப்பட்டது மட்டும் அல்லாமல், பல கோடி வீடுகள் மின்சாரம் இல்லாமல் டார்ச் லைட் வைத்து வாழும் நிலையும் உருவாகியுள்ளது.
இதற்கு மிக முக்கியமான காரணம் சீனாவில் போதுமான மின்சாரம் உற்பத்தி செய்யப்படாமல் இருப்பது தான், சீனா நிலக்கரி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சார அளவீடுகளைச் சுற்றுச்சூழ்நிலையைக் காக்கும் விதமாகக் குறைத்த நிலையில் தற்போது மின்சாரத் தட்டுப்பாடு உருவாகியுள்ளது.
கிட்டதட்ட இதேபோன்ற நிலை தான் தற்போது இந்தியாவிலும் உருவாகியுள்ளது.
இந்தியா
உலகிலேயே வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றான இந்தியாவில் நிலக்கரி உற்பத்தி மற்றும் விநியோகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ள காரணத்தால் இந்தியாவில் மிகப்பெரிய மின்சாரத் தட்டுப்பாடு பிரச்சனை உருவாகும் நிலை ஏற்பட்டு உள்ளது.
நிலக்கரி மின்சார உற்பத்தி தளம் s
இந்தியாவில் இருக்கும் நிலக்கரி மின்சார உற்பத்தி தளத்தில் இன்னும் சிறிது நாட்களுக்கு மட்டுமே போதுமான அளவுக்கு நிலக்கரி இருப்பு உள்ளது. ஆகஸ்ட் மாத துவக்கத்தில் 13 நாட்களுக்குக்கான நிலக்கரி இருப்பு இருந்த நிலையில், இந்த மாதம் துவங்கும் போது வெறும் 4 நாட்களுக்கான நிலக்கரி மட்டுமே உள்ளது.
நிலக்கரி இருப்பு அளவு
கடந்த சில வருடத்தில் இதுபோன்ற நிலை உருவானது இல்லை என்பது மட்டும் அல்லாமல், சில மின்சார உற்பத்தி தளத்தில் நிலக்கரி இருப்பு இல்லை என்று கூறும் அளவிற்கு நிலை உருவாகியுள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் வரலாறு காணாத வரையில் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
70 சதவீத மின்சாரம்
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தில் 70 சதவீதம் நிலக்கரி மூலம் செய்யப்படும் மின்சாரம் தான். இதேவேளையில் இந்தியாவில் பல பகுதிகளில் மின்சாரக் கட்டணம் பெரிய அளவில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சீனா - இந்தியா
சீனா-வை போலவே இந்தியாவும் இரு முக்கியப் பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது. கொரோனா தொற்றுப் பாதிப்பில் இருந்து மீண்டு லாக்டவுன் கட்டுப்பாடுகள் எல்லாம் நீக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பும் வேளையில் தொழிற்துறைக்கான மின்சாரத் தேவை அதிகரித்துள்ளது, இதேவேளையில் நிலக்கரி உற்பத்தியும் குறைந்துள்ளது.
உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி
இந்தியாவில் நான்கில் மூன்று பங்கு நிலக்கரியை உள்நாட்டில் இருந்து தான் உற்பத்தி செய்யப்படும் நிலையில், மழை வெள்ளம் சுரங்க பகுதிகளில் அதிகளவில் நிரம்பியுள்ளதாலும், நிலக்கரி போக்குவரத்து வழித்தடங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாலும் இந்தியாவில் உற்பத்தி பாதித்துள்ளது.
இந்தியாவைப் புரட்டிப்போடும் மின்சாரம்
ஒருபக்கம் நிலக்கரி தட்டுப்பாடு, மறுபக்கம் அதிகப்படியான மின்சாரத் தேவை, நடுவில் அதிகரித்து வரும் மின்சாரம் மற்றும் நிலக்கரி விலை ஆகியவை இந்தியாவைப் புரட்டிப்போட உள்ளது. இந்த நிலை மாறும் வரையில் இந்தியாவில் அதிகளவிலான மின் தடை இருக்கும் எனவும் கிரிசில் அமைப்பு தெரிவித்துள்ளது.
செப்டம்பர் அளவீடுகள்
செப்டம்பர் மாத முடிவில் நிலக்கரி அளவு 8.1 மில்லியன் டன்னாக மட்டுமே உள்ளது, இது கடந்த ஆண்டை விடவும் 76 சதவீதம் குறைவாகவும், இதேபோல் சராசரி ஸ்பாட் பவர் விலை செப்டம்பர் மாதத்தில் 63 சதவீதம் வரையில் உயர்ந்து ஒரு கிலோவாட் 4.4 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இந்திய பொருளாதாரம்
இந்தியாவில் ஏற்கனவே எரிபொருள் விலை அதிகமாக இருக்கும் காரணத்தால் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறைந்துள்ளது. இதேவேளையில் மின்சாரத்தின் விலையும் அதிகரித்துள்ள காரணத்தால் நாட்டின் பொருளாதாரத்தில் பெரிய ஓட்டை விழும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.