கொரோனா காலத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்குச் சம்பளத்தில் கொடுக்கப்படும் கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகள் வழங்கப்படாமல் இருந்த காரணத்தால் இந்த வருடம் அடுத்தடுத்த கிராக்கிப்படி அளவை மத்திய அரசு உயர்த்தி வருகிறது.
31 சதவீத கிராக்கிப்படி
சில மாதங்களுக்கு முன்பு 17 சதவீதமாக இருந்த கிராக்கிப்படி 28 சதவீதமாக உயர்த்தப்பட்ட நிலையில், கடந்த வாரம் மீண்டும் 3 சதவீத உயர்வுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு 31 சதவீதம் கிராக்கிப்படி கொடுக்கப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்கள்
இந்த உயர்வின் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் பெரிய அளவில் உயர உள்ளது. மேலும் இந்த அடுத்தடுத்த உயர்வின் மூலம் மத்திய அரசுப் பணியில் இருக்கும் 47.14 லட்சம் ஊழியர்களும், 68.62 லட்சம் ஒய்வூதியதாரர்கள் பலன் அடைய உள்ளனர்.
மாத சம்பள அளவீடு
தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள 31 சதவீதம் DA மற்றும் DR மூலம் மாத சம்பளம் அதிகரிப்பதோடு வருடாந்திர சம்பளத்திலும் பெரும் மாற்றம் ஏற்பட உள்ளது. மேலும் இந்தப் புதிய சம்பள உயர்வு தீபாவளி பண்டிகையின் போது கிடைக்கும் என்பதால் மத்திய அரசு ஊழியர்களுக்கு இது தீபாவளி போனஸ் ஆக அமைந்துள்ளது.
7வது சம்பள கமிஷன்
7வது சம்பள கமிஷன் அளவின் படி ஆரம்பக்கட்ட பணிகள் அதாவது லெவல் 1-க்கு 18,000 ரூபாய் அடிப்படை சம்பளமாக அளிக்கப்படுகிறது. அதிகப்படியாக 56,900 ரூபாய் அளிக்கப்படுகிறது. இந்த அடிப்படை சம்பள அளவீட்டைப் பொருத்து தான் அனைத்து சலுகையும் கிடைக்கும்.
லெவல் 1 பிரிவு ஊழியர்கள்
உதாரணமாக, ஒருவர் லெவல் 1 பிரிவில் ஒரு பணியாற்றுகிறார் என வைத்துக்கொள்வோம்.
அடிப்படை சம்பளம் - 18,000 ரூபாய்
கிராக்கிப்படி (DA - 31%) - 5,580 ரூபாய்
கிராக்கிப்படி படி 17 சதவீதமாக இருந்த போது 3,060 ரூபாய் மட்டுமே கிடைத்து வந்த நிலையில் தற்போது 5,580 ரூபாய் பெறுவார்கள். இதன் மூலம் மாதம் 2,520 ரூபாயும் வருடம் 30,240 ரூபாயும் கூடுதலாகக் கிடைக்கும்.
அதிகப்படியான சம்பள அளவீடு
இதேபோல் அதிகப்படியான சம்பளம் வாங்குவோருக்குக் கணக்கிட்டால்..
அடிப்படை சம்பளம் - 56,900 ரூபாய்
கிராக்கிப்படி (DA - 31%) - 17,639 ரூபாய்
கிராக்கிப்படி படி 17 சதவீதமாக இருந்த போது வெறும் 9,673 ரூபாய் மட்டுமே கிடைத்தது. இதன் மூலம் மாதம் 7,966 ரூபாயும் வருடம் 95,592 ரூபாயும் கூடுதலாகக் கிடைக்கும்.