உலகின் முன்னணி டெக் நிறுவனங்கள் அனைத்தும் செலவுகளைக் குறைக்கவும், எதிர்வரும் ரெசிஷனை சமாளிக்கவும் ஊழியர்களை அடுத்தடுத்துப் பணிநீக்கம் செய்து வரும் நிலையில் தற்போது இப்பட்டியலில் கம்ப்யூட்டர் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஹெச்பி 6000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்புக்கு மிக முக்கியமான காரணம் டெக் நிறுவன பங்குகளைச் சரிவில் இருந்து மீட்டு எடுப்பது தான், அந்த வகையில் ஹெச்பி நிறுவனத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து ஹெச்பி பங்குகள் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் 1 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
ஹெச்பி நிறுவனம்
ஹெச்பி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் அடுத்த 3 வருடத்தில் தனது உலகளாவிய வர்த்தகத்தில் 4000 முதல் 6000 ஊழியர்கள் வரையில் பணிநீக்கம் செய்யப்படத் திட்டமிட்டு உள்ளதாக அறிவித்துள்ளது.
வருடம் 2000 ஊழியர்கள்
இதன் மூலம் வருடத்திற்கு 1500 முதல் 2000 வரையிலான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதுவரையில் அனைத்து முன்னணி டெக் நிறுவனங்களும் ஊழியர்களை உடனடியாகப் பணிநீக்கம் செய்வதாகவே அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
3 ஆண்டுப் பணிநீக்க திட்டம்
ஆனால் முதல் முறையாக ஹெச்பி நிறுவனம் இந்தப் பணிநீக்கத்தை 3 ஆண்டுகளுக்கு விர்வாக்கம் செய்து 6000 ஊழியர்கள் வரையில் பணியில் இருந்து வெளியேற்ற முடிவு செய்துள்ளது. இத்தகைய திட்டம் மூலம் ஒரு நிறுவனம் வர்த்தகச் சந்தைக்கு ஏற்ப செலவுகளைக் குறைக்க ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடியும்.
கம்ப்யூட்டர் விற்பனை
ஹெச்பி நிறுவனத்தின் கம்ப்யூட்டர் விற்பனை கொரோனா காலத்தில் மிகவும் சிறப்பாக இருந்தது வொர்க் ப்ரம் ஹோம், ஆன்லைன் கல்வி, வீட்டில் இருந்தே கேமிங் போன்ற பல காரணத்திற்காக அதிகளவில் கம்ப்யூட்டர் வாங்கப்பட்டது.
செலவுகள் குறைப்பு
ஆனால் தற்போது கம்ப்யூட்டருக்கான தேவை பெரிய அளவில் குறைந்து வர்த்தகம் மந்தமடைந்துள்ளது. இதன் எதிரொலியாகத் தான் ஹெச்பி நிறுவனம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து செலவுகளைக் குறைக்க முடிவு செய்துள்ளது.
1.4 பில்லியன் டாலர் சேமிப்பு
இதேபோன்ற நடவடிக்கையைத் தான் மெட்டா, மைக்ரோசாப்ட், சேல்ஸ்போர்ஸ் ஆகியவை அறிவித்தது குறிப்பிடத்தக்கது. ஹெச்பி நிறுவனத்தின் 6000 ஊழியர்கள் வரையிலான பணிநீக்கத்தின் மூலம் அடுத்த 3 வருடத்தில் 1.4 பில்லியன் டாலர் சேமிக்க முடியும் என அறிவித்துள்ளது ஹெச்பி.
ஹெச்பி ஊழியர்கள்
அக்டோபர் 2021 தரவுகள் படி ஹெச்பி நிறுவனத்தில் சுமார் 51000 ஊழியர்கள் தனது உலகளாவிய வர்த்தகத்தில் பணியாற்றி இருந்தனர். 2019ல் ஹெச்பி சுமார் 7000-9000 ஊழியர்கள் வரையில் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
ஆல்பபெட்
நேற்று கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் சரியாகப் பணியாற்றாத Poor Performing பிரிவில் இருக்கும் 6 சதவீத ஊழியர்கள் அதாவது 10000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டு உள்ளதாக அறிவித்துள்ளது. ஆல்பபெட் பல மாதங்களாக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யாமல் தொடர்ந்து எச்சரிக்கை மட்டுமே விடுத்து வந்த நிலையில், தற்போது சுந்தர் பிச்சை தலைமையிலான ஆல்பபெட் நிர்வாகம் பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
சிஸ்கோ
ஆல்பபெட் நிறுவனத்திற்கு முன்பு உலகின் முன்னணி டிஜிட்டல் கம்யூனிகேஷன்ஸ் டெக் நிறுவனங்களில் ஒன்றான சிஸ்கோ, தனது மொத்த ஊழியர்களில் 5 சதவீதம் பேர் அதாவது 4000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவித்தது. சிஸ்கோ தனது உலகளாவிய வர்த்தகத்தில் சுமார் 83000 ஊழியர்களைக் கொண்டு உள்ள நிலையில் இந்த 5 சதவீத பணிநீக்கம் மூலம் சுமார் 4100 பேர் தங்களது பணியை இழக்க உள்ளனர்.