நிறைய ஊழல்கள் மற்றும் சொதப்பலான ஆட்சிக்குப் பிறகு, பாஜக, 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது. தேர்தலுக்கு முன் பேசிக் கொண்டது போலவே, நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றார்.
காங்கிரஸ் ஆட்சி முடிந்த உடனேயே "இந்தியப் பொருளாதாரத்துக்கு இனி வசந்த காலம் தான்" என்கிற ரீதியில் கொண்டாடினார்கள்.
2014-க்குப் பின் பொருளாதாரமும் ஓரளவுக்கு வளர்ந்தது. ஆனால் கடந்த ஒரு ஆண்டு காலமாக இந்தியப் பொருளாதாரம் அடி மேல் அடி வாங்கிக் கொண்டு இருக்கிறது.
ஜிடிபி
அதற்கு இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி மற்றும் விலை வாசியை கவனித்தால் போதுமானதாக இருக்கும். முதலில் ஜிடிபியில் தொடங்குவோம். கடந்த ஜூன் 2019 காலாண்டில் 5.0 % மற்றும் செப்டம்பர் 2019 காலாண்டில் ஜிடிபி வெறும் 4.5 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி கண்டு இருக்கிறது. ஆக கடந்த ஜூன் 2016 காலாண்டில் 9.2 %-மாக இருந்த ஜிடிபி வளர்ச்சி, கடந்த செப்டம்பர் 2019 காலாண்டில் 4.5 %-க்கு சரிந்து இருக்கிறது. பாதிக்கு பாதி கூட வளர்ச்சி காணவில்லை. இது தான் ஜிடிபியின் நிலை என்றால் விலை வாசி இன்னும் கொடூரமாக இருக்கிறது.
கணிப்பு
இந்தியாவின் விலை வாசி (நுகர்வோர் பணவீக்கக் குறியீடு) பற்றி, ராய்டர்ஸ் (Reuters) நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில், 40 பொருளாதார வல்லுநர்கள் கலந்து கொண்டார்கள். இந்த கருத்துக் கணிப்பில் தான், இந்தியாவின் விலை வாசி பற்றிய ஒரு திடுக்கிடும் செய்தியை வெளியிட்டு இருந்தார்கள்.
அதிகரிக்கலாம்
இதில் பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள் "இந்திய பொருளாதாரத்தின் விலைவாசி (நுகர்வோர் பணவீக்கம்) கடந்த மே 2014-க்குப் பின் இல்லாத அளவுக்கு அதிகரிக்கலாம். வரும் ஜனவரி 2020-க்கான (சிபிஐ குறியீடு) விலைவாசி 7.40 % தொடலாம்" என குண்டைத் தூக்கிப் போட்டார்கள். அவர்கள் சொன்னது விட அதிகமாகவே நடந்துவிட்டது.
ஜனவரி 2020
கடந்த ஜனவரி 2020 மாதத்துக்கான நுகர்வோர் பணவீக்கக் குறியீடு, கடந்த ஜனவரி 2019 உடன் ஒப்பிட்டால் 7.59 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறதாம். இது கடந்த மே 2014 (மோடி ஆட்சிக்கு வந்த பின்) இல்லாத அளவுக்கு பெரிய விலை வாசி ஏற்றமாம். விலைவாசி அதிகரித்தால் நாடும், நாட்டு மக்களும் நிம்மதியாக இருக்க முடியுமா என்ன..?
பொருட்கள் விலைவாசி உயர்வு
தானியங்கள் வகைகள் 5.25 %
மீன் மற்றும் இறைச்சி 10.50 %
முட்டை 10.41 %
பால் & பால் பொருட்கள் 5.63 %
எண்ணெய் & கொழுப்புகள் 6.65 %
பழங்கள் 5.76 %
காய்கறிகள் 50.19 %
பருப்பு வகைகள் 16.71 %
சர்க்கரை 4.58 %
மசாலா பொருட்கள் 8.25 % என பயங்கரமாக விலை அதிகரித்து இருக்கிறதாம்.
ஆர்பிஐ
ஏற்கனவே, இந்திய பொருளாதாரத்தின் விலை வாசி அதிகமாக இருப்பதால், ஆர்பிஐ, தன் வட்டி விகிதங்களை மேலும் குறைக்க முடியாது எனச் சொன்னது நினைவில் இருக்கலாம். இந்த கால கட்டத்தில், கடந்த ஜனவரி 2020-ல் விலை வாசி அதிகரித்து 7.59 சதவிகிதத்தைத் தொட்டு இருப்பது எல்லோரையும் திடுக்கிட வைத்திருக்கிறது.