உலகளவில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் பணவீக்கம் என்பது மிக மோசமான நிலையினை எட்டியுள்ளது. இதன் காரணமாக ரெசசன் வரலாமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் 41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் உச்சம் தொட்டுள்ளது.
இதற்கிடையில் வளர்ச்சியினை தக்கவைத்துக் கொள்ளவும், சவால்களை எதிர்கொள்ளவும் அமெரிக்காவின் பல முன்னணி நிறுவனங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளன.
முன்னதாக மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் நிறுவனங்கள் தங்கள் பணியமர்த்தலை மெதுவாக்க உள்ளதாக தெரிவித்துள்ளன.
மெதுவாக பணியமர்த்தல்
இதற்கிடையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் அதன் ஊழியர்களில் 1800 பேரை பணி நீக்கம் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு சர்வதேச அளவில் மிகப்பெரிய டெக் ஜாம்பவான் ஆக இருந்து வரும், கூகுள் நிறுவனமும் தங்களது பணியமர்த்தலை குறைத்துக் கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளது.
பணியமர்த்தலை குறைக்கிறோம்
அமெரிக்காவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை கராணமாக இந்த முடிவை எடுத்துக் கொள்வதாக கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்தார்.
சமீபத்தில் இது குறித்து சுந்தர் பிச்சை அனுப்பிய மெயிலில் நடப்பு நிதியாண்டில் ஊழியர்களை புதியதாக பணிக்கு எடுப்பதை குறைக்க இருக்கிறோம் என தெரிவித்திருந்தார்.
ஆப்பிள்
கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனத்தினை அடுத்து தற்போது ஆப்பிள் நிறுவனமும் பணியமர்த்தலை குறைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இது நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் இப்படியொரு நடவடிக்கையினை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. எனினும் இந்த நடவடிக்கையினால் எந்த பாதிப்பும் இருக்காது என்றும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சில பதவிகள் இல்லை
அதோடு சில பதவிகளை தற்போது நிரப்பாது என்று அறிக்கை தெரிவித்துள்ளது.
ஆப்பிள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்மென்டட் ரியாலிட்டி - மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட்டை அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியிட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆரக்கிள் நிறுவனம்
இது தவிர அமெரிக்காவின் மற்ற சில டெக் நிறுவனங்களும் தங்களது பணியமர்த்தலை குறைக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக ஆரக்கிள் நிறுவனம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாகவும், இதன் மூலம் 1 பில்லியன் டாலர் செலவினை குறைக்கவுள்ளதாகவும் மீடியா தகவல்கள் கூறுகின்றன. ட்விட்டர் நிறுவனமும் பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மெதுவாக பணியமர்த்த திட்டம்
நிவிடியா, ஸ்னாப், உபெர், ஸ்பாட்டிபை, இன்டெல் மற்றும் சோல்ஸ்போர்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களும் மெதுவான பணியமர்த்தலை குறைக்க உள்ளதாக தெரிகிறது.