மத்திய அரசு வருமான வரியில் இருந்து ரேஷன் கார்டு வரையில் அனைத்திற்கும் ஆதார் கட்டாயம் இணைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள நிலையில், தற்போது தேர்தல் ஆணையம் போலி வாக்காளர்களைக் களையும் வண்ணம் ஆதார் எண் உடன் வாக்காளர் அடையை இணைக்க வேண்டும் என்ற புதிய விதிமுறையைக் கொண்டு வந்துள்ளது.
நாளுக்கு நாள் ஆதார் எண் பல முக்கியமான விஷயங்களுக்குக் கட்டாயமாகி வருவதால் அதன் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.
தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம் இந்தியாவில் வாக்காளர் பட்டியலை வலுப்படுத்தவும், வாக்களிக்கும் செயல்முறையை மேம்படுத்தவும், தேர்தல் ஆணையத்திற்கு அதிக அதிகாரம் பெறவும், போலி வாக்காளர்கள் மற்றும் அட்டையைப் பயன்பாட்டில் இருந்து நீக்கவும் 4 முக்கிய மாற்றங்களை அறிமுகம் செய்துள்ளது.
4 முக்கிய மாற்றங்கள்
தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ள 4 முக்கிய மாற்றங்களை மத்திய அரசு ஏற்று விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதில் முக்கியமாக வாக்காளர் அட்டை அல்லது தேர்தல் அட்டை ஆகியவற்றுடன் ஆதார் எண்-ஐ டிஜிட்டல் முறையில் இணைக்க வேண்டும் என்ற பரிந்துரையும் உள்ளது.
வரி ஏய்ப்பு
இந்தியாவில் வரி ஏய்ப்பு அதிகமாக நடந்து வரும் நிலையில், அதைத் தடுக்கும் வண்ணம் மத்திய அரசு வங்கி கணக்கு, வருமான வரி கணக்கு, ஆதார் எண் என அனைத்தையும் இணைத்தது மூலம் வருமான வரித்துறைக்கு அதிகப்படியான தரவுகளும், ஒழுங்கு முறைப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் தற்போது கிடைத்துள்ளது.
வாக்காளர்கள் பட்டியல்
இதேபோல் தேர்தல் மற்றும் வாக்காளர்கள் பட்டியலை சீர்படுத்த ஆதார் மாற்றும் வாக்காளர் அட்டை இணைப்பு பெரிய அளவில் உதவும் எனத் தேர்தல் ஆணையம் நம்புகிறது. மேலும் உச்ச நீதிமன்றம் ஆதார் இணைப்பைத் தனிநபர் தகவல் பாதுகாப்பு சார்ந்து கட்டாயப்படுத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளதால், ஆதார் - வாக்காளர் அட்டை இணைப்பைக் கட்டாயமாக்கவில்லை.
4 முறை இணைப்பு
இதன் மூலம் தானாக முன்வந்து வாக்காளர் அட்டை மற்றும் ஆதார் எண்-ஐ இணைக்க வேண்டும் என்றால் ஜனவரி 1ஆம் தேதி முதல் வருடத்திற்கு 4 முறை குறிப்பிட்ட நாட்களில் இணைக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. தற்போது வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இணைக்க வாய்ப்புக் கொடுக்கப்படுகிறது.