இந்தியாவில் ஒருவர் எடுத்தவுடன் வங்கியினை தொடங்கி விட முடியாது. வங்கியை தொடங்குவதற்கு முறையாக ரிசர்வ் வங்கியின் அனுமதியினை பெற வேண்டும். அதற்கும் தகுதி வாய்ந்த நபர்களாக இருக்க வேண்டும்.
குறிப்பாக பெரு நிறுவனங்கள் வங்கி தொடங்க அனுமதி இல்லை. ஆனால் அவர்கள் வங்கிகளில் 10 சதவீதம் பங்குகளை வைத்திருக்கலாம். ஆனால் வங்கிக் குழுவில் இடம்பெற அனுமதி கிடையாது என்ற பல கடும் கட்டுப்பாடுகள் உண்டு.
குறிப்பாக 5000 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ள நிறுவனங்கள் கூட வங்கி தொடங்க விண்ணப்பிக்கலாம். ஆனால் அந்த குழுமத்தில் உள்ள வங்கி அல்லாத நிறுவனத்தின் பங்கு 40% சதவீதத்திற்குள் இருக்க வேண்டும். அப்படி 40% மேல் இருந்தால் அவைகள் விண்ணப்பிக்க முடியாது போன்ற பல கட்டுப்பாடுகள் உண்டு.
சில விதிமுறைகள்
மேலும் 10 வருடங்களுக்கு மேல் வங்கி அனுபவம் இருக்கும் இந்தியர்கள் மட்டுமே வங்கி தொடங்க அனுமதிக்கப்படுவர். குறைந்தபட்சம் ரூ.500 கோடி முதலீடு இருக்க வேண்டும். வங்கித்துறையில் தற்போதைய அதிகபட்ச அந்நிய நேரடி முதலீடு வரம்பு 74 சதவீதம். இதில் 25 சதவீத வங்கிக்கிளைகள் கிராமப்புற பகுதியில் நிச்சயம் தொடங்கியாக வேண்டும். வங்கி தனது செயல்பாட்டை தொடங்கிய ஆறு வருடங்களுக்குள் பங்குச்சந்தையில் பட்டியலிட வேண்டும். வங்கியின் இயக்குநர் குழுவில் அதிகபட்ச தனிப்பட்ட இயக்குநர்கள் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல விதிமுறைகள் உள்ளது.
ரிசர்வ் வங்கியின் பரிந்துரை
இதற்கிடையில் தற்போது ரிசர்வ் வங்கி குழு பல பரிந்துரைகளை செய்துள்ளது. இதன் மூலம் தனியார் வங்கிகள் அமைப்பது எளிதாகலாம் என்றும் கூறியுள்ளது. எனினும் மூலதனங்களை சற்று அதிகரித்துள்ளது. ஆனால் புரமோட்டர் பங்கு விதிமுறைகளில் பெரிய மாற்றங்களை கொண்டு வர பரிந்துரை செய்துள்ளது இந்த பரிந்துரை குழு.
வங்கிகளுக்கான அறிக்கை
குறிப்பாக பெரிய தொழில் நிறுவனங்கள், வங்கிகளை துவங்குவதற்கு அனுமதி வழங்க, ரிசர்வ் வங்கியின் செயற்குழு பரிந்துரைத்துள்ளது. முன்னதாக உரிமையாளர்களுக்கான வழிகாட்டுதல்களையும், தனியார் வங்கிகளின் கார்ப்பரேட் கட்டமைப்பையும் மதிப்பாய்வு செய்ய, ரிசர்வ் வங்கி, செயற்குழு ஒன்றை அமைத்தது. அந்த செயற்குழு தயாரித்துள்ள வழிகாட்டுதல்கள் அடங்கிய அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அனுமதி கொடுக்க பரிந்துரை
அதன்படி 1949ம் ஆண்டின் வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத்தில் தேவையான சில திருத்தங்கள் செய்யப்படவேண்டும் என்றும், அதன் வாயிலாக பெரிய தொழில் நிறுவனங்களுக்கு, புதிய வங்கிகளை துவங்கும் உரிமையை வழங்கவும் அந்த குழு பரிந்துரைத்துள்ளது. அதே நேரத்தில் தனியார் வங்கிகளில், பங்குதாரர்களின் முதலீட்டு அளவை, 15 சதவீதத்தில் இருந்து, 26 சதவீதமாக உயர்த்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பெரிய நிதி நிறுவனங்களுக்கு அனுமதி
இந்த பரிந்துரைகள் குறித்து கருத்துகளை தெரிவிக்க அடுத்த ஆண்டு, ஜனவரி 15ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப, அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டும் அல்ல 50,000 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட சொத்துக்களுடன் நன்கு இயங்கும் பெரிய நிதி நிறுவனங்களையும் வங்கிகளாக மாற்றப்படுவதற்கும் இந்த குழு பரிந்துரை செய்துள்ளது.
ஏற்கனவே பரிந்துரை செய்யப்பட்டது தான்
அதோடு மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களை தனியார் வங்கிகளின் புரோமோட்டர்களாக அனுமதிக்க வேண்டும் என்றும் இந்த குழு விரும்புவதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்த பரிந்துரைகள் இருந்து வருவது தான், ஆக இவைகள் அனுமதிக்கப்படலாம் என்றும் இந்த பரிந்துரை குழு தெரிவித்துள்ளது.
வங்கி தொடங்க முதலீடு
அதே போல் புதிய வங்கிகளுக்கு உரிமம் பெற குறைந்தபட்ச முதலீட்டுத் தொகையாக 1,000 கோடி ரூபாயாக உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது முன்னர் 500 கோடி ரூபாயாக உள்ளது. இதே சிறு நிதி வங்கிகளின் குறைந்தபட்ச முதலீடு 200 கோடி ரூபாயில் இருந்து, 300 கோடி ரூபாயாக உயர்த்தப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.