தமிழ்நாட்டில் கொரோனா 2வது அலை பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் பாதிக்கக் கூடாது என்ற நோக்குடன் தொழிற்சாலைகள் அதிகளவிலான பாதுகாப்புடன் இயங்கி வருகிறது.
தமிழ்நாட்டில் மிகவும் முக்கியத் தொழிற்துறையான ஆட்டோமொபைல் துறை சார்ந்த பல முன்னணி நிறுவனங்களில், கொரோனா தொற்று கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படாத காரணத்தால் ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இதன் வாயிலாகச் சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் இருக்கும் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் அடுத்தடுத்து மூடப்பட்டு வருகிறது.
ரெனால்ட் நிசான் தொழிற்சாலை
திங்கட்கிழமை சென்னையில் இருக்கும் ரெனால்ட் நிசான் தொழிற்சாலையின், ஊழியர்கள் அமைப்புத் தொழிற்சாலையில் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளை முழுமையாக நிர்வாகம் எட்டாத நிலையில் ரெனால்ட் நிசான் இந்தியா தொழிலாளர் சங்கம் புதன்கிழமை முதல் பணி வர மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம்
இது தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கிலும் எவ்விதமான இடைக்காலத் தளர்வுகளும் அளிக்காத நிலையில், ஊழியர்களை இந்தக் கொரோனா காலத்தில் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என நிர்வாகத்தை எச்சரித்துள்ளது.
ஹூண்டாய் நிறுவனம்
இதேபோல் ஹூண்டாய் நிறுவனத்திலும் ஊழியர்களுக்கான பாதுகாப்புப் பிரச்சனை எழுந்த வேளையில், ஹூண்டாய் நிர்வாகம் ஊழியர்களின் பாதுகாப்புக்காக 5 நாள் தற்காலிகமாகத் தொழிற் சாலையை மூட உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் மே 25 முதல் மே 29 வரையில் தொழிற்சாலை இயங்காது.
ராயல் என்பீல்டு தொழிற்சாலை
இதைத்தொடர்ந்து நாட்டின் முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ராயல் என்பீல்டு அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக் காரணமாகச் சென்னையில் இருக்கும் 3 தொழிற்சாலையையும் மே 27 முதல் மே 29 வரையில் 3 நாட்கள் முழுமையாக மூடுவதாகத் தானாக முன்வந்து அறிவித்துள்ளது.
ஊழியர்களின் கோரிக்கை
மேலும் மூடப்பட்ட தொழிற்சாலை ஊழியர்கள் மத்தியில் நிறுவனத்தில் தனிமனித இடைவெளி கடைப்பிடிப்பது இல்லை என்றும், பணியாற்றும் போது அளிக்கப்படும் கொரோனா பாதுகாப்பு, ஊழியர்கள் அளித்துள்ள கொரோனா தொற்றுக்கான மருத்து உதவிகள் போதுமானதாக இல்லை என வருந்துகின்றனர்.