உலக நாடுகளின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்குப் புதிய தொழிற்சாலை துவங்க மிகவும் விரும்பத்தக்க இடமாக இந்தியா விளங்குகிறது எனப் பிரதமர் நரேந்திர மோடி இந்தியன் மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் பேசினார்.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகப் பல முன்னணி வெளிநாட்டு ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் இந்திய மண்ணில் தொழிற்சாலையை அமைக்கப் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் இன்னும் பல நிறுவனங்கள் இந்தியாவில் ஸ்மார்ட்போன் தொழிற்சாலையை அமைக்க ஆர்வம் காட்டி வருகிறது.
பிரதமர் மோடி திட்டம்
ஸ்மார்ட்போன் தயாரிப்புக்கு இந்தியா விரும்பத்தக்க நிறுவனமாக மாறிவரும் நிலையில், இந்தியாவில் டெலிகாம் உபகரணங்கள் உற்பத்தியை ஊக்குவிக்கச் சிறப்பு உற்பத்தி இணைப்பு மானிய திட்டம் (PIL திட்டம்) கொண்டு வரப்பட்டு உள்ளது.
எனவே அனைவரும் இணைந்து இந்தியாவை டெலிகாம் உபகரணங்கள் வடிவமைப்பு, வளர்ச்சி, உற்பத்திக்கு குளோபல் ஹப்- ஆக மாற்றுவோம் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா சீனா
அமெரிக்கா சீனா இடையே ஏற்பட்ட வர்த்தகப் பிரச்சனையின் காரணமாகச் சீனாவில் இருந்து பல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் வெளியேறியது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட இந்தியா PIL திட்டத்தின் மூலம் பல வெளிநாட்டு ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களை ஈர்த்துள்ளது.
விஸ்திரான் கூடுதல் முதலீடு திட்டம்
இந்தியாவின் டெக் நகரமான பெங்களூரில் புதிய தொழிற்சாலையை அமைக்கக் கடந்த வருடம் விஸ்திரான் அமைக்கச் சுமார் 1,947 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்ய ஒப்புதல் பெற்று அறிவித்தது. தற்போது கூடுதலாக 900 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்ய முடிவு செய்துள்ளது.
பெகாட்ரன் புதிய தொழிற்சாலை திட்டம்
இதேபோல் சில நாட்களுக்கு முன் ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி கூட்டணி நிறுவனமான பெகாட்ரன், இந்தியாவில் தொழிற்சாலையை அமைக்க 150 மில்லியன் டாலர் அதாவது 1,100 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்ய மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்றுள்ளது.
9 சீன உற்பத்தி நிறுவனங்கள்
அமெரிக்காவின் முன்னணி டெக் நிறுவனமான ஆப்பிள் சுமார் 9 ஸ்மார்ட்போன் உற்பத்தி தளங்களைத் தனது உற்பத்தி நிறுவனங்களோடு, சீனாவில் இருந்து இந்தியாவிற்கு மாற்றியுள்ளது எனக் ரவி சங்கர் பிரசாத் சில வாரங்களுக்கு முன்பு நடந்த 23வது பெங்களூரூ டெக் மாநாட்டில் கூறினார்.
உற்பத்தி விரிவாக்கம்
இதேபோல் இந்தியாவில் ஏற்கனவே ஸ்மார்ட்போன் உற்பத்தி செய்து வரும் பாக்ஸ்கான், சாம்சங் போன்ற நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டில் உற்பத்தி பணிகளைப் பல மடங்கு விரிவாக்கம் செய்துள்ளனர். இதனால் இந்தியா தற்போது ஸ்மார்ட்போன் தயாரிப்புக்கு குளோபல் ஹப் ஆக மாறியுள்ளது.
இந்தியாவில் டெலிகாம் உபகரணங்கள்
இதேபோல் தற்போது தற்போது சீனாவின் டெலிகாம் உபகரணங்களுக்குப் பல நாடுகளில் தடை விதிக்கப்பட்டு வரும் நேரத்தில் இந்தியாவை டெலிகாம் உபகரணங்கள் வடிவமைப்பு, வளர்ச்சி, உற்பத்திக்கு குளோபல் ஹப் ஆக மாற்ற வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.