உலகளவில் ஆட்டோமொபைல் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் அனைத்து முன்னணி நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கத் தீவிரம் காட்டி வருகிறது. இந்தியாவில் மாற்றும் எரிபொருள் பொருள் கொண்ட இன்ஜின், ஹைட்ரஜென் வாயுவில் இயங்கும் ஹைடர்ஜென் செல் கார் போன்ற முக்கியமான திட்டத்தைத் தீட்டி வந்தாலும் பன்னாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தொடர்ந்து ஓரே இலக்கில் தான் பயணிக்கிறது.
உலகளவில் அதிகக் கார்களை விற்பனை செய்யும் அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் எலக்ட்ரிக் கார்களைத் தயாரிக்கவே அதிகளவில் ஆர்வம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் ஹூண்டாய் மிக முக்கியமான ஒரு முடிவை எடுத்துள்ளது.
ஹூண்டாய் இந்தியா
தென் கொரிய நிறுவனமான ஹூண்டாய் இந்தியாவில் சுமார் 4000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டில் 6க்கும் அதிகமான எலக்ட்ரிக் கார்களை 2028ஆம் ஆண்டுக்குள் அறிமுகம் செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இந்த 4000 கோடி ரூபாய் முதலீட்டுத் திட்டம் இந்திய சந்தைக்காகவே திட்டமிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி ரூபாய் முதலீடு
இந்த 4000 கோடி ரூபாய் முதலீட்டுத் திட்டத்தின் முதல்கட்டமாகப் பெரிய மற்றும் ப்ரீமியம் பிரிவு கார்களைத் தயாரித்து அடுத்த வருடத்திற்குள் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது ஹூண்டாய். இதன் மூலம் இனி வரும் காலகட்டத்தில் ஹூண்டாய் இந்தியாவில் பெட்ரோல், டீசல் கார்களின் உற்பத்தி எண்ணிக்கையைப் படிப்படியாகக் குறைத்து எலக்ட்ரிக் கார் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
எஸ்எஸ் கிம்
இதுக்குறித்து ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிர்வாகத் தலைவர் எஸ்எஸ் கிம் கூறுகையில், ஆட்டோமொபைல் துறையில் எலக்ட்ரிக் வாகனங்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதால் வர்த்தகம் மற்றும் உற்பத்தியை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.
விரைவில் இந்தியா
பல நாடுகளில் மொத்த கார் விற்பனையில் 5ல் ஒரு பங்கு எலக்ட்ரிக் கார்களாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் விரைவில் இதேபோன்ற நிலவரம் விரைவில் வரலாம், மேலும் எங்களுடைய 6 பேட்டரி கொண்ட கார் வடிவம் பல கார்களை விரைவாக உருவாக்கும் வாய்ப்பை கொண்டு உள்ளதால் விரைவில் IC இன்ஜின் வர்த்தகத்தை EV வர்த்தகம் வென்றிடும் என எஸ்எஸ் கிம் தெரிவித்துள்ளார்.
மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ்
சமீபத்தில் தான் மாருதி சுசூகி நிறுவனம் எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிப்பதாக அறிவித்தது, ஏற்கனவே டாடா மோட்டார்ஸ் பல எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்துள்ள நிலையில் கொஞ்சம் கேப் விட்டா கூட மற்ற நிறுவனங்களின் வர்த்தகத்தைத் தட்டிப்பறித்து விடும் என உணர்ந்து ஹூண்டாய் 4000 கோடி ரூபாய் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.
16-17 சதவீத வர்த்தகச் சந்தை
இந்திய கார் விற்பனை சந்தையில் ஹூண்டாய் நிறுவனம் சுமார் 16-17 சதவீத வர்த்தகச் சந்தையைக் கொண்டு உள்ளது, சமீபத்தில் அறிமுகம் செய்த கார்கள் அனைத்தும் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள காரணத்தால் எலக்ட்ரிக் வாகன பிரிவில் மாருதி சுசூகி மற்றும் டாடா-வுக்கு இடம் கொடுக்கக் கூடாது என ஹூண்டாய் 4000 கோடி ரூபாய் முதலீட்டை அறிவித்துள்ளது.