இந்தியாவில் 12 நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை உயரவில்லை என்பதால் மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தனர். இதுமட்டும் அல்லாமல் அடுத்த சில நாட்களுக்கு விலை உயர்வு இருக்காது எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இன்று சற்றும் எதிர்பாராத வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை திரும்பவும் உயரத் துவங்கியுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலர் விலை ஆகியவற்றின் அடிப்படையில் சுத்திகரிப்பு நிறுவனங்கள் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிகரித்துள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை
இன்று அறிவிக்கப்பட்ட விலை உயர்வின் படி இந்தியாவில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 31-35 பைசாவும், டீசல் விலை 33 -38 பைசாவும் உயர்ந்துள்ளது. இதனால் நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தைத் தொட்டு உள்ளது.
கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள்
நாடு முழுவதும் மக்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு குறித்துக் கடுமையான விமர்சனம் செய்து வரும் நிலையில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் 2 நாட்கள் எரிபொருள் விலையை உயர்த்துவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். ஆனால் செவ்வாய்க்கிழமை மீண்டும் விலை உயரத் துவங்கியுள்ளது.
இதன் அடிப்படையில் டெல்லியின் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 35 பைசா உயர்த்தப்பட்டு 90.93 ரூபாய்க்கும், டீசல் 81.32 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
5 மாநில அரசுகள்
மேலும் மேற்கு வங்காளம், ராஜஸ்தான், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து இன்று நாகாலாந்து மாநிலமும் மதிப்புக் கூட்டு வரியைக் குறைத்து தன் மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்துள்ளது. இந்த 5 மாநிலங்களும் மத்திய அரசிடம் வரியைக் குறைக்கப் பல முறை கோரிக்கை வைக்கப்பட்டும் குறைக்காத நிலையில் மாநில அரசு வருமான இழப்பை ஏற்றுக்கொண்டது.
தமிழ்நாடு இடைக்காலப் பட்ஜெட்
தமிழ்நாட்டில் இன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்காலப் பட்ஜெட்-ல் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியைக் குறைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மக்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.
பெட்ரோல் விலை நிலவரம்
இந்நிலையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை டெல்லியில் 90.93 ரூபாயாகவும், மும்பையில் 97.34 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 91.12 ரூபாயாகவும், சென்னையில் 92.90 ரூபாயாகவும், பெங்களூரில் 93.98 ரூபாயாகவும், ஹைதராபாத்தில் 94.54 ரூபாயாகவும், போபால்-லில் 98.96 ரூபாயாகவும், பாட்னாவில் 93.25 ரூபாயாகவும், ஜெய்ப்பூரில் 97.47 ரூபாயாகவும், கூர்கிராமில் 88.88 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
டீசல் விலை நிலவரம்
இதேபோல் ஒரு லீட்டர் டீசல் விலை இன்று இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் உயர்ந்துள்ள நிலையில் டெல்லியில் 81.32 ரூபாயாகவும், மும்பையில் 88.44 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 84.20 ரூபாயாகவும், சென்னையில் 86.31 ரூபாயாகவும், பெங்களூரில் 86.21 ரூபாயாகவும், ஹைதராபாத்தில் 88.69 ரூபாயாகவும், போபால்-லில் 89.60 ரூபாயாகவும், பாட்னாவில் 86.57 ரூபாயாகவும், ஜெய்ப்பூரில் 89.82 ரூபாயாகவும், கூர்கிராமில் 81.90 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.