உள்நாட்டு விலைவாசியை கட்டுப்படுத்துவதற்காக கோதுமை மற்றும் சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதித்த மத்திய அரசு, தற்போது அரிசி ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடு விதிக்கும் திட்டம் இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாட்டில் பணவீக்கம் அதிகரித்ததை அடுத்து அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக, கோதுமை, சர்க்கரை, சமையல் எண்ணெய் ஆகியவற்றின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது.
இந்த நிலையில் அந்தப் பட்டியலில் தற்போது அரிசியும் இணைய வாய்ப்பு இருப்பதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் கூறுகின்றன. உள்நாட்டில் போதுமான அளவு அரிசி விநியோகத்தை உறுதி செய்யவும், அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்தவும், அரிசி ஏற்றுமதி குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்யலாம் என கூறப்படுகிறது.
அரிசி ஏற்றுமதிக்கு தடை?
பாசுமதி அல்லாத அரிசி மற்றும் ஒரு சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், இந்த பொருட்களின் விலைவாசி உயர்வுக்கான அறிகுறிகள் தெரிந்தால், உடனடியாக ஏற்றுமதிக்கு தடை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவின் அரிசி உற்பத்தி
சீனாவிற்கு அடுத்தபடியாக உலகிலேயே அரிசி உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. 2021 - 22 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியா, 150 நாடுகளுக்கு அரிசியை ஏற்றுமதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அரிசி உள்ளிட்ட ஐந்து பொருட்களுக்கு ஏற்றுமதி கட்டுப்பாடுகள் விதிக்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுவதால், உள்நாட்டில் அரிசி விலை குறையும் வாய்ப்பு உள்ளது.
அன்னிய செலவாணி
அரிசி மீதான கட்டுப்பாடுகள் சர்க்கரை மீதான கட்டுப்பாடுகள் போல இருக்கும் என்றும் கூறப்படுகிறது. நடப்பு நிதி ஆண்டில் இந்தியா 6.115 பில்லியன் டாலர் பாஸ்மதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த நிதியாண்டில் விவசாயப் பொருட்களில் அரிசி ஏற்றுமதியில் தான் அன்னிய செலவாணி வருமானம் அதிகமாக கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலக நாடுகளின் பிரதிபலிப்பு
கோதுமை ஏற்றுமதியை தடை செய்ததற்கு இந்தியாவுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தும், ஏற்றுமதி தடையை விலக்க வேண்டும் என்று கெஞ்சியும் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அரிசி ஏற்றுமதிக்கும் தடை விதித்தால் உலகநாடுகளின் பிரதிபலிப்பு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.