இந்தியாவில் கொரோனா தொற்றுக் காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டு இருந்த நேரத்தில் பல பொருட்கள் திடீரென அதிகளவில் விற்பனை ஆனது, அதில் முக்கியமாகச் சேனிடைசர், மாஸ்க், டோலோ, உணவு பொருட்கள், பிஸ்கட், பன்னீர், ஸ்னாக்ஸ் இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
இதில் பல பொருட்களின் நிலையில் தற்போது தலைகீழாக மாறியுள்ளது, அதில் ஒன்று தான் அகர்பத்தி. இந்தியாவில் அகர்பத்தி விற்பனை குறைய என்ன காரணம் என்பது தான் தற்போது முக்கியமான கேள்வி.
லாக்டவுன்
லாக்டவுன் காலத்தில் அகர்பத்தி விற்பனை 30 சதவீதம் வளர்ச்சியைப் பதிவு செய்த நிலையில், தற்போது கொரோனா தொற்று குறைந்து, லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்ந்து அலுவலகங்கள் முழுமையாகத் திறக்கப்பட்ட நிலையில் அகர்பத்தி விற்பனை வேகமாகக் குறைந்துள்ளது. ஏன் தெரியுமா..?
அகர்பத்தி விற்பனை
லாக்டவுன் கட்டுப்பாடுகள் காரணமாக அனைத்து கோவில்களும் மூடப்பட்ட நிலையில், மக்கள் வீட்டிலேயே தினசரி கடவுளைப் பிராத்திக்கத் துவங்கினர். மேலும் இந்த லாக்டவுன் எத்தனை நாள் நீடிக்கும் எனத் தெரியாமல் இருந்த நிலையில் மக்கள் அதிகளவில் வாங்கிக் குவித்த பொருட்களில் அகர்பத்தியும் அடங்கியது.
விற்பனை சரிவு
தற்போது கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டுக் கோவில்கள் முதல் அனைத்தும் திறக்கப்பட்ட நிலையிலும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி மீண்டும் பிசியாக மாறியுள்ள நேரத்தில் அகர்பத்தி விற்பனை பெரிய அளவில் சரிந்து ஒரு இலக்கு வளர்ச்சியை அடைந்து வருகிறது.
இது தான் காரணம்
அகர்பத்தியுடன், துளசி, கற்பூரம் ஆகியவையும் இப்பட்டியலில் உள்ளது.
லாக்டவுன் தளர்வுகள் மக்கள் கோவில்களுக்கு செல்வது அதிகரித்தாலும், WFH முடிந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய காரணத்தாலும் அகர்பத்தி விற்பனை குறைந்துள்ளது.
ரூ.12000 கோடி சந்தை
அகர்பத்தி தயாரிப்பில் பல முன்னணி நிறுவனங்கள் இருந்தாலும் இதில் வகைப்படுத்தாத துறை தான் மிகவும் அதிகம். அகர்பத்தி தயாரிப்பு என்பது 10000 -12000 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகச் சந்தையைக் கொண்டது.
போட்டி
அகர்பத்தி தயாரிப்பில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் தற்போது சிறு உற்பத்தியாளர்களை ஓரம்கட்ட ரோஸ் மற்றும் சந்தன நறுமணம் கொண்ட அகர்பத்திகளைத் தாண்டி அன்னாசி, கிரீன் ஆப்பிள், மஸ்க் மெலான் போன்ற புதிய நறுமணத்திலும் அகர்பக்திகளைத் தயாரித்து வித்தியாசம் காட்டுகிறது. ஆனால் லாக்டவுன்-க்கு பின்பு வர்த்தகம் குறைந்தது என்பது பெரும் பாதிப்பாகவே உள்ளது.
சேனிடைசர்
கொரோனா காலத்தில் சேனிடைசர் டிமாண்ட் அதிகமாக இருந்த வேளையில் பல முன்னணி நிறுவனங்கள் சேனிடைசர் உற்பத்திக்காகப் புதிய தொழிற்கூடத்தை அமைத்தது. ஆனால் தற்போது சந்தையில் டிமாண்ட் குறைந்த காரணத்தால் பல முன்னணி நிறுவனங்கள் சேனிடைசர் தொழிற்சாலையை மூடியது குறிப்பிடத்தக்கது.