செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களின் பல்வேறு வேலைகளையும் படிப்படியாக தன்வசமாக்கி வருகிறது. கஸ்டமர் சர்வீஸ் , ஹெச்.ஆர், கோடிங் மற்றும் பல்வேறு அலுவலகத்தில் அமர்ந்து பணிபுரியக்கூடிய பல்வேறு வேலைகளும் தானியங்கி முறைக்கு மாற்றப்பட்டு ஏஐ வசம் சென்று வருகின்றன. இதனால் உலகம் முழுவதுமே ஆயிரக்கணக்கானவர்கள் வேலை வாய்ப்பினை இழந்து வருகிறார்கள்.
மனிதர்களுக்கு மாற்றாக ஏஐ மற்றும் ஏஐ ஏஜெண்டுகள் நியமனம் செய்தால் அந்த சம்பளத்தை சேமிக்கலாம் லாபத்தை அதிகரிக்கலாம் என்பதே டெக் நிறுவனங்களின் இந்த முடிவுக்கு காரணமாக இருக்கிறது. அதாவது 10 மனிதர்கள் செய்யும் வேலையை ஒரு ஏஐ கருவி செய்துவிடும் என்கிறன. இதனால் நிறுவனங்கள் ஏஐ பயன்பாட்டை அதிகரித்துவிட்டு ஊழியர்களை அதாவது மனிதர்களை வேலையில் இருந்து நீக்கிய வண்ணம் இருக்கின்றன. ஆனால் அது மிகப் பெரிய தவறு என்பதை மைக்ரோசாஃப்ட் மற்றும் ஊபர் நிறுவனங்கள் வெளிப்படையாகவே தெரிவித்திருக்கின்றன.

உலகின் முன்னணி டெக் நிறுவனமான மைக்ரோசாப்ட் ஆறு மாதத்திற்கு முன்னர் தான் கோடிங் வேலைகளுக்கு கிளாட் கோடிங் ஏஐ ஏஜெண்டிக் உரிமத்தை பெற்று தங்களுடைய பல்வேறு பிரிவுகளிலும் கோடிங் வேலைகளை ஏஐ வசம் ஒப்படைத்தது. ஆனால் இது எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை ஆறு மாதத்திலேயே தங்களுடைய பெரும்பாலான கிளாட் கோடு உரிமங்களை ரத்து செய்திருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம் பொறியாளர்களை மீண்டும் அந்த வேலைகளுக்கு நியமனம் செய்து வருகிறதாம்.
ஊபர் நிறுவன தலைமை தொழில்நுட்ப அதிகாரி தி இன்பர்மேசன் தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில், ஊபர் நிறுவன செயல்பாடுகளை ஏஐ தொழில்நுட்பத்திற்கு படிப்படியாக மாற்ற திட்டமிட்டு அதற்காக 2026ஆம் ஆண்டில் ஏஐ பயன்பாட்டுக்கு என பட்ஜெட் ஒதுக்கப்பட்டது. அந்த பட்ஜெட் 4 மாதங்களிலேயே காலியாகிவிட்டது என கூறியுள்ளார். அதாவது மனிதர்களை விட ஏஐ இடம் வேலைவாங்க அதிகம் செலவாகிறது என்பதே இந்த நிறுவனங்களின் புலம்பலாக இருக்கிறது.
மனிதர்களுக்கு மாற்றாக ஏஐ தொழில்நுட்பங்களை வேலையில் அமர்த்துவது மற்றும் ஊழியர்களை அதிக அளவில் ஏஐ கருவிகளை பயன்படுத்தச் செய்வது இந்த இரண்டும் நிறுவனங்களின் செலவுகளை மிக வேகமாக அதிகரிக்க செய்திருப்பதே மைக்ரோசாப்ட் மற்றும் ஊபர் நிறுவனத்தின் இந்த நிலைக்கு காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர். என்விடியா நிறுவனத்தின் துணைத் தலைவர் ஆன பிரயன் ஆக்சியோஸ் தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் மனிதர்களை வைத்து ஒரு வேலையை முடிக்க ஆகும் செலவை விட ஏஐ வைத்து முடிப்பதற்கு ஆகும் செலவு அதிகமாக இருக்கிறது என வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.
ஏஐ தொழில் நுட்பங்கள் தங்களுடைய செயல் திறனை மேம்படுத்த மேம்படுத்த அதற்கேற்ப நிறுவனங்களுக்கான செலவுகளும் அதிகரிக்கின்றன என்பதே இந்த துறை சார்ந்த நிபுணர்கள் முன்வைக்கக்கூடிய முக்கியமான ஒரு வாதம். ஏஐ கருவிகள் அதாவது பெரிய லாங்குவேஜ் மாடல்கள் பயன்பாட்டுக்கு டோக்கன் அடிப்படையில் தான் கட்டணம் விதிக்கப்படுகின்றன. அவை திறம்பட செயல்படுவதற்கு அதிக டோக்கன்களை பயன்படுத்துகின்றன அதிக டோக்கன்கள் பயன்படுத்தப்படும் போது நிறுவனங்களுக்கு அதிக செலவு ஏற்படுகிறது என்கின்றன. எனவே தான் நிறுவனங்களுக்கு செலவு அதிகரிக்கிறது. ஏஐ மனிதர்கள் வேலையை பறிக்கும் நிலையில் இது ஒரு நல்ல தகவல். ஏனெனில் செலவு அதிகரித்தால் நிறுவனங்கள் தாங்களாகவே ஏஐ விடுத்து மனிதர்களுக்கு மாறிவிடும்.


Click it and Unblock the Notifications

