டோரேமான் மிகவும் பிரபலமான கார்ட்டூன். இது ஒரு பூனை கதாபாத்திரம். அதில் நோபீட்டா என்ற ஒரு சிறுவனும் இருப்பான். அவனுக்கு தேவைப்படும் எல்லா வேலைகளையும் இந்த டோரேமான் எனும் பூனை செய்து கொடுக்கும். இதை பார்க்கும் பலருக்கு நமக்கும் இதே போல ஒரு கேரக்டர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். அதை உண்மையாக்கும் வகையில் தற்போது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பெரு நிறுவனங்கள் ஏற்கனவே மனிதர்களுக்கு இணையான AI ஏஜெண்டுகளை பயன்படுத்தத் தொடங்கி விட்டன. இதன் அடுத்த கட்டமாக இனி பேமெண்ட்டும் உங்களுக்கு பதிலாக ஏஐ ஏஜெண்ட் செய்யப் போகிறது.
உதாரணமாக எப்போது மளிகை சாமான் விலை குறைகிறதோ அப்போது எனக்கு வாங்கித் தா என்று நீங்கள் ஏஐ ஏஜெண்டிடம் சொன்னால் போதும்.. உடனே உங்களுடைய கட்டளையை ஏற்று அது வாங்கித் தரும். இப்படி ஒரு விஷயம் தான் இனி வரும் காலத்தில் நடக்கப் போகிறது.

நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) யுபிஐ மூலம் பயனர்கள் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு பதிலாக AI ஏஜெண்டுகளை பயன்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான உள்கட்டமைப்பை உருவாக்க திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் புதிய முயற்சி அமலுக்கு வந்தால் பணம் செலுத்துவதற்கு பயனர்களின் ஒப்புதல் தேவையில்லை. ஏஐ ஏஜெண்டுகள் எல்லா வேலையையும் பார்த்துக் கொள்ளும்.
IMF அறிக்கையின் படி யூபிஐ ஏற்கனவே உலகின் விரைவான பண பரிவர்த்தனை முறைகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ரூ.29.82 லட்சம் கோடி மதிப்புள்ள 24.51 பில்லியன் பரிவர்த்தனைகள் யூபிஐ மூலம் நடந்துள்ளன. இதில் கூகுள் பே மற்றும் போன் பே ஆகிய தளங்களின் பங்கு சற்று அதிகமாகவே உள்ளது.
யூனிஃபைட் ஏஜெண்ட் ப்ரோட்டோகால்: ஏற்கனவே UPI பயன்படுத்துபவர்கள் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் பாஸ்வேர்டை போட்டு உள்நுழைய வேண்டும். அதன் பிறகு யுபிஐ பின் நம்பரை வழங்கி பணம் அனுப்பலாம். பணம் பெறுவதற்கு இது எதுவுமே தேவையில்லை. பிறர் அனுப்பும் பணம் நேரடியாக உங்கள் அக்கவுண்டுக்கு வந்துவிடும்.
ஆனால் தற்போது NPCI முன்மொழிந்துள்ள புதிய யூனிஃபைடு ஏஜெண்ட் புரோடோகாலின் கீழ் மனிதர்கள் ஒவ்வொரு முறையும் எவ்வளவு பணப்பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்பதை சொல்ல வேண்டும். ஆனால் எடுத்தவுடன் அதிகளவிலான பணப்பரிவினைக்கு AI ஏஜெண்டுகளை பயன்படுத்த போவதில்லை. முதலில் குறைந்த மதிப்புள்ள பரிவர்த்தனைகளுக்கு மட்டும் பயன்படவுள்ளது.
இது குறித்த பிற விவரங்கள் மும்பையில் நடைபெறும் குளோபல் பின்டெக் விழாவில் வெளியிடப்படும் என்று ராய்ட்டர்ஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் NPCI தரப்பில் இதுவரையில் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
ஆரம்பத்தில் மளிகை சாமான்கள், இ-காமர்ஸ் தளங்களில் செய்யப்படும் ஷாப்பிங் போன்றவற்றுக்கு பயனர்கள் AI ஏஜெண்டுகளை பயன்படுத்தலாம். ஆனால் அதற்கும் இவ்வளவு வரம்பு வரை செலவு செய்ய வேண்டும் என்ற தொகையை பயனர்கள் தான் நிர்ணயிக்க வேண்டும்.
ஏற்கனவே பைன் லேப்ஸ் என்ற ஒரு நிறுவனம் AI ஏஜெண்ட்டைப் பயன்படுத்தி யூபிஐ பரிவர்த்தனையை செய்வதற்கு பி3பி என்ற புரோட்டோகாலை உருவாக்கியுள்ளது.இந்தியாவின் டிஜிட்டல் பயணத்தில் தற்போது NPCI கொண்டு வரவுள்ள புதிய அம்சமும் சேர்ந்துள்ளது. எனிவரும் காலத்தில் இது குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications

