இந்தியாவில் பண பரிவர்த்தனை முறையில் யுபிஐ ஏற்படுத்திய மிகப்பெரிய மாற்றத்தை போலவே, கடன் வழங்கும் துறையிலும் செயற்கை நுண்ணறிவு ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
மும்பையில் தேசிய வங்கி மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய சஞ்சய் மல்ஹோத்ரா, தற்போது பலருக்கு முறையான கிரெடிட் ஸ்கோர் மற்றும் கிரெடிட் வரலாறு இல்லாததால் வங்கிகளிடமிருந்து கடன் பெறுவது கடினமாக உள்ளது, இந்த சிக்கலை போக்க ஏஐ உதவும் என குறிப்பிட்டார்.

தற்போது ஒரு நபர் ஏற்கனவே வாங்கிய கடன்கள், கிரெடிட் கார்டு ஆகியவற்றை மட்டுமே கொண்டு தான் கடன் வழங்கலாமா வேண்டாமா என தீர்மானிக்கப்படுகிறது. இதனால் இதுவரை கடனே வாங்காத நபர்களுக்க் கிரெடிட் ஸ்கோர் இல்லை என கூறி வங்கிகள் கடன் வழங்குவதை தவிர்க்கின்றன.
இந்நிலையில் ஒரு நபர் ஜிஎஸ்டி தாக்கல் செய்த விவரங்கள், அவரது பணப்புழக்கம் மற்றும் பிற கட்டணங்களை செலுத்திய விவரங்கள் போன்ற மாற்று தரவுகளை பயன்படுத்தி, கடன் பெற தகுதியான புதிய நபர்களை வங்கிகள் அடையாளம் காண ஏஐ உதவி செய்ய முடியும், இதன் மூலம், இதுவரை வங்கி சேவைகளை பெறாத பலரும் கூட எளிதாக வங்கி கடன் பெற வழிவகை செய்ய முடியும் என அவர் தெரிவித்தார்.
வங்கிகள் ஏஐ தொழில்நுட்பத்தை ஒரு தனிப்பட்ட திட்டமாக பார்க்காமல், ஒரு Strategic திட்டமாக அணுக வேண்டும் என சஞ்சய் மல்ஹோத்ரா கேட்டு கொண்டார். வங்கிகளில் ஏஐ பயன்பாடு என்பது வங்கியின் வாரிய குழுவாலே வழிநடத்தப்பட வேண்டும். இதற்கு தொடர்ச்சியான முதலீடுகளும், வலுவான நோக்கமும் அவசியம் என்றார்.
ஆதார், யுபிஐ, டிஜிலாக்கர் போன்ற இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு வசதிகள், நிதி சேவைகளை வேகமாகவும், எளிமையாகவும், கடைசி மனிதருக்கும் கொண்டு செல்ல உதவுகின்றன என மல்ஹோத்ரா பெருமிதத்துடன் கூறினார். தற்போது அதே இடத்தில் ஏஐ கொண்டு வர வேண்டிய கட்டாயம் உண்டாகி இருக்கிறது என தெரிவித்தார்.
வங்கி மேலாளர்கள் ஏஐ கருவிகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு துல்லியமான தயாரிப்புகளை பரிந்துரைக்கவும், அபாயங்களை முன்கூட்டியே அறியவும் முடியும் என கூறும் அவர் ஏஐ உதவியுடன் புகார்களை விரைவாக தீர்க்கவும், வாடிக்கையாளர்களுக்கு சரியான நிதி ஆலோசனைகளை வழங்கவும் முடியும் என தெரிவித்தார்.
வழக்கமான முறைகளை விட, ஏஐ மற்றும் மெசின் லேர்னிங் தொழில்நுட்பங்கள் மோசடிகளை நிகழ்நேரத்தில் கண்டறிய உதவும் என தெரிவித்த அவர், ஏஐ கவனக்குறைவாக பயன்படுத்தினால் அது புதிய வகை சிக்கல்களை உருவாக்கும் என்றும் ஆளுநர் எச்சரித்தார். குறிப்பாக, அல்காரிதம்களில் பாரபட்சம், தரவுப் பாதுகாப்பு மற்றும் சைபர் அச்சுறுத்தல்கள் குறித்து வங்கிகள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்றார்.


Click it and Unblock the Notifications

