சிஇஓ பதவிக்கும் வேட்டு வைக்கும் ஏஐ.. பயமுறுத்தும் மோ கவ்டாட்.. யார் இவர்..?

டெக் தலைவர்கள் கடந்த சில வருடமாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மனித முன்னேற்றத்தின் பொன்னான யுகத்தை கொண்டு வரும் என்று அடித்து கூறி வருகின்றனர். ஆனால் தற்போது நடப்பது எல்லாம் மிகவும் வித்தியாசமாக உள்ளது. எங்கு திரும்பினாலும் பணிநீக்கம்.. பொருளாதாரம் சரிவின் அச்சம்..

இதை உறுதி செய்யும் வகையில் முன்னாள் கூகுள் நிர்வாகி ஒருவர், ஏஐ புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி மனித வேலையை மேம்படுத்தும் என்ற கருத்தை கடுமையாக நிராகரித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வரும் ஆண்டுகளில் உலகம் முழுவதும் அனைத்து துறையிலும் வேலை இழப்புகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளார். சொல்லப்போனால் ஏஐ மூலம் சிஇஓ-க்களுக்கே வேலைவாய்ப்பு ரிஸ்க் தான். யார் இவர்..?

 சிஇஓ பதவிக்கும் வேட்டு வைக்கும் ஏஐ.. பயமுறுத்தும் மோ கவ்டாட்.. யார் இவர்..?

கூகுள் எக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை வணிக அதிகாரி தான் இந்த மோ கவ்டாட். இவர் 'தி டைரி ஆஃப் எ சிஇஓ' போட்காஸ்ட்டில் பேசுகையில், "செயற்கை நுண்ணறிவு என்பது 100% பொய்" என்று கூறினார். அனைத்து துறையிலும் உயர்மட்ட ஊழியர்களின் பணியை ஏஐ விரைவில் பறித்துவிடும் என்று பொட்டில் அடித்தது போல் பேசியுள்ளார்.

மோ கவ்டாட், ஏஐ தொழில்நுட்பத்தின் தாக்கம் குறித்த கவலையை மிகவும் வெளிப்படையாக இந்த பாட்காஸ்டில் வெளிப்படுத்தியுள்ளார். ஏஐ மூலம் அடுத்த 5 முதல் 15 ஆண்டுகளுக்குள் ஜாப்ஸ் ஆர்மகெடான் அதாவது மிகப்பெரிய வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படுத்தும் என்று கணித்துள்ளார். இது போன்ற கருத்துகள், வேலைவாய்ப்பு சந்தையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஏஐ மனிதர்களை விட சிறப்பாக செயல்படும் என்பதால், வேலைவாய்ப்பு சந்தையில் பெரும் மாற்றங்களை கொண்டு வரும். ஏனெனில் ஏஐ வெறும் உற்பத்தித்திறன் அதிகரிப்பு மட்டுமல்ல, வேலை வாய்ப்புகளை குறைக்கும் காரணியாகவும் உள்ளது.

பல நிறுவனங்கள் ஏற்கனவே ஏஐ அடிப்படையிலான பணியாளர்களை தயார்படுத்துவதற்காக ஊழியர்களை எண்ணிக்கையை குறைத்து அல்லது புதிய ஆட்களை நியமிப்பதை நிறுத்தியுள்ளன. டூலிங்கோ, வொர்க்டே, கிளார்னா போன்ற நிறுவனங்கள் மனித ஊழியர்களை ஏஐ அமைப்புகளுக்கு மாற்றி வருகின்றன.

இந்த போக்கு, ஏஐ தொழில்நுட்பத்தின் விரைவான வளர்ச்சியை காட்டுகிறது. நிறுவனங்கள் செலவுகளை குறைத்து உற்பத்தித்திறனை அதிகரிக்க இந்த மாற்றங்களை செய்கின்றன, ஆனால் இது பலரின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது.

மோ கவ்டாட் மேலும் பேசுகையில், இந்த நிலை தொடரும் பட்சத்தில் தலைமை நிர்வாகிகளின் (சிஇஓக்கள்) பணி கூட பாதுகாப்பாக இல்லை என்று எச்சரித்துள்ளார்.

"சிஇஓக்கள் இப்போது ஏஐ உதவியுடன் ஊழியர்களை வெளியேற்றி, உற்பத்தித்திறன் அதிகரிப்பு மற்றும் செலவு குறைப்புகளை கொண்டாடுகின்றனர். ஆனால், அவர்கள் நினைக்காத ஒன்று, ஏஐ அவர்களையும் மாற்றும் என்பது தான்" என்று மோ கவ்டாட் இந்த பாட்காஸ்டில் தெரிவித்துள்ளார்.

"ஏஜிஐ (ஆர்டிஃபிஷியல் ஜெனரல் இன்டலிஜென்ஸ்) மனிதர்களை விட எல்லாவற்றிலும் சிறப்பாக இருக்கும், அதில் சிஇஓ ஆக இருப்பதும் அடங்கும். உண்மையில், பெரும்பாலான திறமையற்ற சிஇஓக்கள் மாற்றப்படும் காலம் விரைவில் வரும்" என்றும் மோ கவ்டாட் எச்சரித்தார். இது, உயர்மட்ட நிர்வாகிகளுக்கும் ஏஐயின் அச்சுறுத்தல் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.

ஏஐ ஏற்கனவே கோடிங், வாடிக்கையாளர் சேவை, நிர்வாகம், சந்தை பகுப்பாய்வு போன்ற பணிகளை மனிதர்களை விட வேகமாக செய்கிறது. கூகுள் டீப்மைண்ட் மற்றும் ஓபன்ஏஐ போன்ற நிறுவனங்களின் தலைவர்கள், 2030ஆம் ஆண்டுக்குள் ஏஐ மிக சக்திவாய்ந்த மனிதர்களை கூட மிஞ்சிவிடும் என்று கணித்துள்ளனர்.

இந்த வளர்ச்சி, ஏஐ தொழில்நுட்பத்தின் வேகத்தை வெளிப்படுத்துகிறது, ஆனால் அதே நேரத்தில் வேலை சந்தையில் பெரும் சவால்களை உருவாக்கும். இந்த மாற்றங்கள், சமூகத்தை தலைகீழாக புரட்டிப்போடக்கூடியது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+