செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பிரம்மிக்க வைக்கிறது. இந்த தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பல துறைகளிலும் ஊழியர் பணிநீக்கம் நடக்கிறது. ஐடி, ஹெச்,ஆர், பிபிஓ போன்ற துறைகளில் மனிதர்களின் வேலைகளை ஏஐ பறித்து கொண்டது. ஆனால் இந்தியாவில் ஏஐ வேலை இழப்புகளை விட அதிகமான வேலைவாய்ப்புகளை என ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது.
நோமுரா நிறுவனம் இந்தியாவில் ஏஐ தாக்கம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. Beyond the Headlines: AI Has Added Jobs in Asia - So Far என்ற பெயரில் வெளியாகியுள்ள அறிக்கையில் 2022 முதல் 2026 ஆகஸ்ட் வரையிலான காலக்கட்டத்தில் ஆசியாவில் ஏஐ தொழில்நுட்பத்தால் 131,000 வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன என்றும், 61,000 வேலைவாய்ப்புகள் பறிபோயுள்ளன என்றும் தெரிவித்துள்ளது.

இந்தியா, சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் ஏஐ தொடர்பான வேலைவாய்ப்புகளில் நிகர வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. ஆனால் இதில் தான் ஒரு சிக்கல் உள்ளது என கூறுகிறது. வரும் காலத்தில் உருவாகும் வேலைவாய்ப்பு சந்தையை K-வடிவ சந்தை என நோமுரா வரையறை செய்துள்ளது. அதாவது, ஜூனியர் மற்றும் அனுபவமிக்க பணியாளர்களுக்கு இடையேயான இடைவெளி அதிகரிக்கும் என்கிறது.
தற்போது நிறுவனங்களுக்கு மூத்த ஊழியர்களே அதிகம் தேவைப்படுகின்றனர், இதனால் தொடக்க நிலை பணியாளர்களை சார்ந்திருப்பதை நிறுவனங்கள் குறைத்துக்கொள்கின்றன என்கிறது. இந்திய கவுன்சில் ஃபார் ரிசர்ச் ஆன் இன்டர்நேஷனல் எகனாமிக் ரிலேஷன்ஸ் (ICRIER) நடத்திய ஆய்வில், 55% தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் எண்ட்ரி லெவல் ஆட்களை சேர்ப்பதை குறைத்துள்ளன என்பது தெரியவந்துள்ளது. ஆனால், மூத்த பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு பெரிதாக குறையவில்லை.
இதனால் பட்டதாரிகள் அண்மையில் படிப்பை முடித்து வேலை தேடுபவர்களுக்கு கடினமான சூழல் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. எனவே இனி நிறுவனங்களில் திடீரென பெருமளவிலான பணிநீக்கங்கள் நடப்பதை காட்டிலும், புதிய ஆட்களை எடுப்பதை குறைக்கும் போக்கு அதிகரிக்குமாம். இந்த போக்கை சைலண்ட் ஃபயரிங் என நோமுரா குறிப்பிடுகிறது. இது பெரிய அளவிலான பணிநீக்கங்களை போல் ஊடகங்களின் கவனத்தை ஈர்க்காது ஆனால் சத்தமே இல்லாமல் ஆயிரக்கணக்கானவர்களை பாதிக்கும் என்கிறது.
உடல் உழைப்பு அல்லது நேரடி மனித தொடர்பு அதிகம் தேவைப்படும் துறைகளில் ஏஐ-ஆல் வேலை இழப்புகள் மிக குறைவாகவே உள்ளன என்றும், உற்பத்தித் துறை ,கட்டுமானம் , மருத்துவம் மற்றும் கல்வித்துறை ஆகியவை ஆட்டோமேஷன் செய்வதற்கு கடினமானவை என்பதால் இந்த துறைகளில் வேலை செய்வோர் அச்சப்பட தேவையில்லை என்கிறது.
இந்தியாவில் புதிய ஏஐ வேலைவாய்ப்புகள் Data annotation, Linguistics மற்றும் ஐடி சேவைகள் போன்ற பகுதிகளில் அதிகமாக உருவாகியுள்ளன என தெரிவித்துள்ளது. எனவே வேலை தேடுவோர் இந்த துறைகளில் கவனம் செலுத்த அறிவுரை வழங்குகின்றது. இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் பிபிஓ துறைகள் ஏஐ எளிதில் செய்யக்கூடிய பணிகளை அடிப்படையாக கொண்டே கட்டமைக்கப்பட்டிருந்தன. இதனால் இந்த வேலைகள் விரைவில் முழுமையாக ஏஐ வசம் சென்றுவிடுமாம்.
தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் வேலைவாய்ப்புகளில் ஏஐ நேர்மறையான தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது என நோமுரா அறிக்கை கூறுகிறது. ஏனெனில் பணி நீக்கங்களை விட வேலைவாய்ப்பு உருவாக்கம் அதிகமாக உள்ளதால் தற்போதைக்கு பாதிப்பில்லை என்கிறது.


Click it and Unblock the Notifications

