உலக நாடுகள் மற்றும் முன்னணி டெக் நிறுவனங்கள் ஏஐ மற்றும் Super intelligence தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சத்யா நாதெல்லா மிக முக்கியமான ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், நாம் உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்திற்கு உதவுவதாகவும், தொடர்ந்து மனிதர்களின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழும் இல்லாவிட்டால், அந்த தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் எந்த அர்த்தமும் இல்லை; அது தேவையற்றது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அண்மை காலமாக ஏஐ ஆய்வுகளுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் ஏஐ மனிதர்களை மிஞ்சும் அளவுக்கு வளர்ந்து வருகிறது என தொடர்ச்சியான புகார்கள் எழுந்து வருகின்றன. இந்த சூழலில் தான் சத்ய நாதெல்லா இப்படி ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அவர் தலைமை வகிக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனமே இது போன்ற நவீன ஏஐ ஆய்வுகளில் தான் ஈடுபட்டு வருகிறது, அதற்காக பல லட்சம் கோடிகளை முதலீடும் செய்துள்ளது.
அதிநவீன ஏஐ தொழில்நுட்பத்தின் நன்மைகள் பல்வேறு நாடுகள், சமூகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சமமாக பரவ வேண்டும் , இதற்கு Closed மற்றும் Open-source என இரண்டு வகையான மாடல்களும் இணைந்த ஒரு ஆரோக்கியமான சூழ்நிலை தேவை என கூறியுள்ளார். மேலும் வணிக நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்தை தங்களின் அன்றாட பணிகளில் இணைத்துக் கொள்ளும்போது, நிறுவனங்களின் தனித்துவமான மற்றும் ரகசியமான நிபுணத்துவ தகவல்கள் யாரிடம் இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளர்.
வணிக நிறுவனங்கள் வெறும் ஏஐ சேவைகளை பயன்படுத்துவோராக மட்டும் இருக்கக் கூடாது; தங்கள் நிறுவனத்தின் தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது, எப்படி மேம்படுத்தப்படுகிறது என்பதில் முழுமையான கட்டுப்பாட்டை கொண்டிருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
ஏஐ தொழில்நுட்பத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக, சரியான வேகத்தில் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும், ஏஐ அமைப்புகள் மனிதர்களின் குறிக்கோள்கள், மதிப்புகள் மற்றும் பாதுகாப்பு தேவைகளுக்கு ஏற்ப நடந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்கிறார். அதாவது ஒரே அடியாக ஏஐ ஆய்வுகளை நிறுத்திவிடாமல், அது பாதுகாப்பாக சீராக வளர்வதை உறுதி செய்ய வேண்டும் என கோரியுள்ளார். இதற்காக Embedded evaluators போன்ற பாதுகாப்பு வழிமுறைகளையும், கோட்பாடுகளையும் உருவாக்கலாம் என யோசனை கூறியுள்ளார்.
ஏஐ மனிதர்களின் கை மீறி போய்விட கூடாது என குரல்கள் வலுவாக எழ தொடங்கியுள்ளன. Anthropic நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடி, அதிநவீன மாடல்களின் வளர்ச்சியை சிறிது காலம் நிறுத்தி வைக்கலாம் என கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைவர் சாம் ஆல்ட்மேன் மற்றும் எலான் மஸ்க் போன்றோரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.தற்போது சத்ய நாதெல்லாவும் அதே போன்ற கருத்தினை கூறியுள்ளார். ஆனால் இப்படி கருத்து கூறும் நிறுவன தலைவர்கள் தான் போட்டி போட்டு கொண்டு ஏஐ ஆய்வுகளை நடத்துகின்றன.


Click it and Unblock the Notifications


