இந்தியாவை சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் ரேஷன் கடைகளில் கிடைக்க கூடிய அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்டவற்றை தான் தங்களுடைய முக்கிய உணவு ஆதாரமாக பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் மத்திய , மாநில அரசுகள் ரேஷன் கடைகள் வாயிலாக இலவசமாகவும் மானிய விலையிலும் பல்வேறு பொருட்களை விநியோகம் செய்து வருகின்றன.
அரசின் பல்வேறு நலத்திட்டங்களும் ரேஷன் அட்டை மூலமாகவே கிடைக்கிறது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் ரேஷன் கார்டை அடிப்படையாகக் கொண்டுதான் மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் ஒட்டுமொத்தமாகவே நாடு முழுவதும் இருக்கக்கூடிய பொது விநியோகத் திட்டத்தை டிஜிட்டல் அடிப்படையில் மேம்படுத்துவதற்காக மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தை கையில் எடுத்திருக்கிறது.

ரேஷன் பொருட்கள் கடத்தல் மற்றும் முறைகேடுகளை தடுக்கும் வகையிலும் சரியான திட்டங்கள் சரியான பயனாளிகளுக்கு சென்று சேர்வதை உறுதி செய்யவும் பொது விநியோகத் திட்டத்தை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதற்கு மத்திய அரசு 25,530 கோடி ரூபாயில் புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டத்தில் Sarthak-PDS என்ற இந்த புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் பொது விநியோகத் திட்டம் அதாவது ரேஷன் கடை சம்பந்தப்பட்ட அனைத்து நிர்வாகமும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்படும். இதனால் நிர்வாக செலவுகள் கணிசமாக குறையும், நிதி விநியோகமும் சீராக நடக்கும் என மத்திய அரசு தெரிவிக்கிறது. அது மட்டும் இல்லாமல் ஏஐ தொழில்நுட்பத்தை பொது விநியோகத் திட்டத்தில் முழுமையாக பயன்படுத்துவதற்கு இந்த திட்டம் உதவி செய்யும்.

ஏஐ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு சரியான பயனாளிகளை அடையாளம் காண்பது, உணவு தானியங்களின் போக்குவரத்தை டிராக் செய்வது, ரேஷன் அட்டைதாரர்களின் புகார்களை கையாள்வது என்பன உள்ளிட்ட பணிகள் மேம்படுத்தப்பட உள்ளன. இதன்படி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியாவில் ரேஷன் பொருட்கள் விநியோகமே மிகப்பெரிய அளவில் மாற்றம் அடைய இருக்கிறது. இதற்காக ஏஐ அடிப்படையிலான மூன்று முக்கியமான கருவிகள் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளன.
ஏஐ அடிப்படையில் நிர்மல் என்ற ஏஐ கருவி கொண்டு வரப்படுகிறது. இந்த நிர்மல் ஏஐ நிகழ் நேர அடிப்படையிலான ஒரு தரவுத்தளத்தை உருவாக்கும். அதில் பொது விநியோகத் திட்டத்தின் பயனாளிகளின் பெயர்கள் இடம் பெற்றிருக்கும்,அது அரசின் மற்ற துறைகள் மற்றும் அமைச்சகங்களோடு இணைக்கப்பட்டு குறிப்பிட்ட சலுகைகளை பெறுவதற்கு இவர்கள் தகுதியானவர்கள் தானா அல்லது அந்த வரம்பில் இருந்து இவர்களுடைய வருமானம் உயர்ந்து விட்டதா என்பதை எல்லாம் தொடர்ந்து கண்காணிக்கும். இதன் மூலம் பொருத்தமான பயனாளிகளுக்கு அரசின் திட்டங்கள் சென்று சேரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மக்களுக்கு அவர்களின் மொழியிலேயே அவர்களின் புகார்களை தீர்த்து வைப்பது மற்றும் சந்தேகங்களுக்கு விளக்கம் தருவது உள்ளிட்ட சாட் பாட் மற்றும் வாட்ஸ்அப் மற்றும் ஐவிஆர் சேவைகள் , தொலைபேசி அழைப்பு வசதிகளை கையாள ASHA என்ற ஏஐ கருவி கொண்டுவரப்பட இருக்கிறது. ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 3 லட்சம் கேள்விகளை கையாளும் வகையிலும் இரண்டு லட்சம் போன் கால்களை கையாளும் வகையிலும் இந்த சிஸ்டம் செயல்பட இருக்கிறதாம்.
அடுத்ததாக SAKSHAM என்ற ஏஐ கருவி உருவாக்கப்படுகிறது இந்த ஏஐ கருவி மூலம் பொருட்கள் விநியோகம் கண்காணிக்கப்படும் அதாவது ரேஷன் கடையில் வினியோகம் செய்யப்படக்கூடிய பொருட்களின் சரக்கு எங்கிருந்து புறப்பட்டு எங்கு செல்கிறது இதில் எப்படி செலவை சிக்கனப்படுத்தலாம் என்பன உள்ளிட்ட முடிவுகள் எடுக்க இது பயன்படுத்தப்படும், ரேஷன் பொருள் கடத்தலையும் இது முடிவுக்கு கொண்டு வரும்.


Click it and Unblock the Notifications


