ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் வந்தாலும் வந்தது அதிலிருந்து மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பயம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இனி கம்ப்யூட்டரே கம்ப்யூட்டர் வேலைகளை எல்லாம் பார்த்துக் கொண்டால்.. சாப்ட்வேர் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் கதி என்னவாகும்? இனி ஐடி வேலை கிடைக்குமா? கிடைக்காதா? என்ற கவலை பலரிடமும் எழுந்துவிட்டது. அதற்கேற்ப நிறுவனங்களும் பணிநீக்கம் செய்து வருகின்றன.
சமீபத்தில் கூட டிசிஎஸ் நிறுவனம் அடுத்த 3 ஆண்டுகளில் ஊழியர்களுக்கு நிகரான ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் ஏஜெண்டுகளை பயன்படுத்த இருப்பதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்படி இருக்கையில் இந்தியாவின் மற்றொரு முன்னணி ஐடி நிறுவனமாக இருக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவர் நந்தன் நிலேகனி ஏஐ தொடர்பாக ஒரு சில கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 45-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அந்நிறுவனத் தலைவர், "என்னதான் AI தொழில்நுட்பம் வளர்ந்தாலும் எங்களைப் போன்ற நிறுவனங்களை அது ஒருபோதும் பாதிக்காது. இதனால் எங்களின் இலக்கும், வேகமும் பல மடங்கு அதிகரிக்குமே தவிர பிரச்சனை வராது" என்று கூறினார்.

வேலைவாய்ப்பு துறையில் முக்கிய பங்காற்றுவது என்னவோ இந்த ஐடி துறை தான். அப்படி இருக்கையில் ஜெனரேட்டிவ் AI தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து வந்தால்.. சாப்ட்வேர் சேவைகளுக்கான தேவை குறைந்து விடுமோ? என்ற விவாதம் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.
ஐடி துறையின் மீது வைக்கப்படும் இந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்த நீலேகனி, "எதிர்காலத்தில் கம்ப்யூட்டரே கோடிங் எழுதி தானியங்கி முறையில் செயல்பட்டாலும் இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்களில் வேலை இருக்குமா? இருக்காதா? என்ற கேள்வி உங்களுக்கெல்லாம் எழுவது நியாயம் தான். ஆனால் அதற்காக கவலைப்பட தேவையில்லை. சாப்ட்வேர் டெவலப்மென்ட் என்பது வெறும் கம்ப்யூட்டர் கோடிங்குடன் முடிவதல்ல.
அதையும் தாண்டி பல விஷயங்கள் இதில் இருக்கிறது. ஒரு சாப்ட்வேரை உருவாக்க வேண்டும் என்றால் அந்த நிறுவனத்தின் பின்னணி என்ன? தேவை என்ன? அவர்கள் ஏற்கனவே பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் அதை இணைப்பது எப்படி? அதாவது இன்டெகரேஷன் செயல்முறை என்று இதை ஆங்கிலத்தில் கூறுவார்கள். அப்படி சாப்ட்வேரை வழங்கிய பின்னர் அவர்களுக்கு வழங்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் என்னென்ன? சாப்ட்வேரை முடித்த பிறகு செய்ய வேண்டிய டெஸ்டிங் செயல்முறைகள் என பல விஷயங்களை இருக்கின்றன. இவற்றையெல்லாம் அவ்வளவு சீக்கிரத்தில் AI-ஆல் மாற்றிவிட முடியாது.
இப்படி பெரு நிறுவனங்கள் இந்த AI தொழில்நுட்பத்தை முழுமையாக பயன்படுத்துவதில் பெரிய கேப் இருக்கிறது என்பதுதான் நிதர்சன உண்மை. இந்த ஏஐ மூலம் ஒரு சில நன்மைகளும் நடந்துள்ளது. பல ஆண்டுகளாக IT நிறுவனங்கள் பழைய சிஸ்டம்களை பயன்படுத்தி வந்தனர். ஆனால் இப்போது ஏற்பட்டுள்ள ஏஐ புரட்சியின் காரணமாக கண்டிப்பாக அவற்றை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு ஐடி நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. இதனால் ஐடி நிறுவனங்களில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய மெகா ப்ராஜெக்ட்டுகள் அசுரவேகத்தில் வரத் தொடங்கியுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இன்போசிஸ் நிறுவனர் தங்களுடைய டாப் 200 வாடிக்கையாளர்களில் சுமார் 90 சதவீத நிறுவனங்களுடன் ஏற்கனவே AI ப்ராஜெக்ட்களில் பணியாற்றி வருவதாக ஒப்புக்கொண்டார். வருகின்ற 2030-ஆம் ஆண்டுக்குள் அவர்களுடைய சேவையை அதிகரித்து உலகளாவிய சந்தை மதிப்பை 300 முதல் 400 பில்லியன் டாலராக அதிகரிக்கவும் இன்போசிஸ் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டார். இதற்கு மத்தியில் கடந்த 2026 ஆம் நிதியாண்டில் மட்டும் இன்போசிஸ் நிறுவனம் சுமார் 20.2 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது .கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இது 3.1 சதவீத வளர்ச்சியை குறிக்கிறது.
எனவே AI-ஆல் உடனடியாக அனைத்து வேலைகளையும் மாற்றிவிட முடியாது என்பது தெளிவாகிறது. இனிவரும் நாட்களில் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக் கொண்டால், கண்டிப்பாக தங்களுக்கென ஒரு வேலையை கண்டுபிடிக்க முடியும் என்பதே நிதர்சன உண்மை.


Click it and Unblock the Notifications