தலைவர்களின் மோதலுக்கு சொத்துமதிப்பு காரணமா? அதிமுகவுக்கு எத்தனை கோடி சொத்து இருக்குது தெரியுமா?
கடந்த சில வாரங்களாக அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே பெரும் பிரச்சனை நடந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.
அதிமுக பொதுக் குழுவை கூட்டி பொதுச்செயலாளர் என்ற பதவியை பெற எடப்பாடி பழனிசாமி முயற்சிக்க, அதற்கு ஓபிஎஸ் சட்ட நடவடிக்கைகளின் மூலம் முட்டுக்கட்டை போட்டு வந்தார் என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கூட நீதிமன்றம் இன்று அனுமதித்து நிலையில் இன்று சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலராக தேர்வு பெறுவதாக தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஓபிஎஸ்க்கு எதிராக ஒரு சில தீர்மானங்களும் இயற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
எம்ஜிஆரின் அதிமுக
முன்னாள் அமைச்சர் எம்ஜிஆர் கடந்த 1972ஆம் ஆண்டு அதிமுக என்ற கட்சியை தொடங்கினார். எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக தமிழக சட்டமன்றத்தில் ஏழு முறை வெற்றிகரமாக ஆட்சியில் இருந்தது என்பதும் தற்போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுச்செயலாளர்
அதிமுகவின் பொதுச் செயலாளராக கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பதவி வகித்தார். அவருடைய மறைவுக்குப் பின்னர் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டு அதில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பதவி வகித்தனர்.
எடப்பாடி பழனிசாமி
இந்த நிலையில்தான் தற்போது மீண்டும் பொதுச் செயலாளர் பதவி குறித்த சர்ச்சை ஏற்பட்டு தற்போது இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுள்ளார்.
நன்கொடை
அதிமுகவை பொறுத்தவரை மாநில கட்சியாக இருந்தாலும் தேசிய அளவிலும் கவனம் பெறக்கூடிய மிகப் பெரிய வெற்றி என்பதும் அக்கட்சிக்கு பல தொழில் அதிபர்கள் கோடிக்கணக்கில் தேர்தல் நேரத்திலும் சாதாரண நேரத்திலும் நன்கொடை அளித்து வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சொத்து மதிப்பு
கடந்த 2020 - 21 ஆம் ஆண்டு நிலவரப்படி அதிமுகவுக்கு ரூ.260.16 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன என்பதும் அந்த ஆண்டில் மட்டும் 42.37 கோடி வருமானம் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமை பதவி
ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கில் வருமானம் வரக்கூடிய அதிமுகவின் தலைமைப் பதவியை கைப்பற்றுவதில் தான் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே கடந்த சில வாரங்களாக போட்டி நடைபெற்றது. இதில் தற்போதைய நிலவரப்படி எடப்பாடி பழனிசாமி கை ஓங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் வலுவாகுமா?
வருமானம் உள்ள கட்சி மட்டுமின்றி ஆட்சியை மீண்டும் பிடிக்கக்கூடிய வலுவான கட்சி என்பதால் தான் இன்னும் அதிமுகவுக்கு மக்கள் மத்தியிலும் தொழிலதிபர்கள் மத்தியிலும் மரியாதை உள்ளது. பதவிக்காக மோதிக்கொள்ளாமல் அதிமுக தலைவர்கள் ஒற்றுமையுடன் கட்சியை செவ்வன நடத்தினால் அதிமுக மீண்டும் வலுவான, அசைக்க முடியாத கட்சியாக உருமாறும் என்பது தான் அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.


Click it and Unblock the Notifications