2025-26ஆம் கல்வியாண்டில் பல்வேறு காரணங்களுக்காக நாடு முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகளை மூட அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) உத்தரவிட்டுள்ளது மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் கீழ் தான் நாடு முழுவதும் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பொறியியல் கல்லூரிகள் தரத்துடன் செயல்படுவதை மாணவர்களுக்கு சிறந்த கற்றல் வாய்ப்புகளை தருவதையும் , உறுதி செய்ய வேண்டியது ஏ.ஐ.சி.டி.இ. தான். அந்த வகையில் கல்லூரிகளின் தர நிலைகளை அவ்வப்போது கண்காணித்து விதிகளை மீறி செயல்படும் கல்லூரிகளை மூடுவதற்கான நடவடிக்கையை ஏ.ஐ.சி.டி.இ., எடுத்து வருகிறது.

அந்த வகையில் தான் 2025-26ஆம் கல்வியாண்டில் பல்வேறு காரணங்களுக்காக நாடு முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகளை மூட ஏ.ஐ.சி.டி.இ. உத்தரவிட்டுள்ளது. பல்வேறு கல்லூரிகளிலும் நடத்தப்பட்ட சோதனையின்போது, குறைவான மாணவர் சேர்க்கை, ஆசிரியர்கள் பற்றாக்குறை, உள்கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டு விதிமுறைகளுக்கு இணங்காதது போன்றவை கண்டறியப்பட்டதால் 58 பொறியியல் கல்லூரிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது என அதிகாரிகள் கூறுகின்றனர்.
மூடப்பட்ட 58 கல்வி நிறுவனங்களில், மூன்று அரசு உதவி பெற்றவை, மற்றவை தனியார் நிதியுதவியுடன் செயல்பட்டு வந்தவை. அதிகபட்சமான உத்தர பிரதேசம், மஹாராஷ்டிராவில் தலா 12 கல்லூரிகளும், மத்திய பிரதேசத்தில் 8 கல்லூரிகளும், தெலுங்கானா மற்றும் பஞ்சாபில் தலா 4 கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. ஆந்திரா, ராஜஸ்தான் மாநிலங்களில் தலா 3 கல்லூரிகளும், குஜராத், கர்நாடகா, மஹாராஷ்டிரா, தமிழகத்தில் தலா 2 கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. ஹரியானா, ஒடிஷா, உத்தராகண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு கல்லூரி மூடப்பட்டுள்ளன.
இதனை Progressive closure என அழைக்கிறார்கள். அதாவது உடனே இந்த கல்லூரிகள் மூடப்பட்டுவிடாது. இந்த பொறியியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டிற்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நடக்காது. அதே வேளையில் இரண்டாம் ஆண்டு , மூன்றாம் ஆண்டு பயின்று வரும் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. அவர்கள் அங்கேயே தங்கள் படிப்புகளை தொடரலாம். இந்த கல்லூரிகளில் படிப்பை முடித்த பொறியியல் பட்டதாரிகளுக்கு, தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும்.
எனவே ஏற்கனவே படிக்கும் மாணவர்களுக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லை , ஆனால் புதிதாக யாரும் இங்கே சேர முடியாது. தமிழ்நாட்டில் இரண்டு கல்லூரிகள் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதே தவிர அவற்றின் பெயர் வெளியிடப்படவில்லை. எனவே தமிழ்நாட்டு பெற்றோர் 12ஆம் வகுப்பு முடித்த தங்கள் பிள்ளைகளை பொறியியல் படிப்பில் சேர்க்கும் போதும் கவுன்சிலிங்கிலும் கல்லூரி தேர்வு செய்யும் போது அது ஏ.ஐ.சி.டி.இ. அங்கீகாரம் பெற்ற கல்லூரியா என்பதை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்ப்பது நல்லது.


Click it and Unblock the Notifications

