அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்தினை தொடர்ந்து ஏர் இந்தியா விமானம் என்றாலே பயணிகள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக சர்வதேச பயணங்களுக்கு ஏர் இந்தியா விமானத்தை பயன்படுத்த பலரும் தயக்கம் காட்டுகிறார்கள் என சொல்லப்படுகிறது.
விமான விபத்து: கடந்த 12ஆம் தேதி அகமதாபாத்திலிருந்து லண்டனை நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சில நொடிகளிலேயே விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்த ஒருவரை தவிர அனைவருமே உயிரிழந்தனர். இது ஏர் இந்தியா மீதான நம்பகத்தன்மையை குறைத்துவிட்டது. இதனிடையே பயணிகளின் நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும், மீண்டும் பயணிகளை தங்கள் நிறுவனத்தை நோக்கி கொண்டு வர வேண்டும் என்பதற்காகவும் ஏர் இந்தியா சர்வதேச விமான பயணங்களுக்கான டிக்கெட்டுகளின் விலையை பாதி அளவு குறைத்து இருக்கிறது.

டிக்கெட் விலை குறைப்பு: பிசினஸ் டுடே வெளியிட்டுள்ள செய்தியின் படி அகமதாபாத் விமான விபத்தினை தொடர்ந்து ஏர் இந்தியா விமானங்களில் வெளிநாட்டு பயணங்களுக்காக டிக்கெட் முன்பதிவு செய்வது வேகமாக குறைந்து இருப்பதாக தெரிவிக்கிறது. எனவே இந்த செய்தி நிறுவனம் மேக் மை டிரிப் தளத்தில் ஆய்வு செய்து வெளியிட்டுள்ள செய்தியின் படி பார்க்கும்போது டெல்லியில் இருந்து பாரிஸ் செல்வதற்கு ஏர் இந்தியா விமானத்தில் 31,000 ரூபாய் மட்டுமே பயண கட்டணமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது, இதுவே பிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமான ஏர் பிரான்ஸில் டெல்லியில் இருந்து பாரிஸ் செல்வதற்கு 64,000 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும்.
பாதியாக விலை குறைப்பு: ஏர் இந்தியா விமானத்தில் டெல்லியில் இருந்து ஆம்ஸ்டர்டாம் செல்வதற்கான டிக்கெட் கட்டணம் 26,200 ரூபாயாக குறைக்கப்பட்டிருக்கிறது. அதுவே மற்ற சர்வதேச விமான சேவை நிறுவனங்கள் 66,000 ரூபாயை கட்டணமாக விதிக்கின்றன. டெல்லியில் இருந்து ஹாங்காங் செல்வதற்கு ஏர் இந்தியா விமானத்தில் 13,000 ரூபாய்க்கு டிக்கெட் கிடைக்கிறது, ஆனால் கேத்தே பசிபிக் இதைவிட மூன்று மடங்கு அதிகமாக கட்டணம் வசூல் செய்கிறது. அதேபோல டெல்லியில் இருந்து டோக்கியோ வுக்கு செல்வதற்கு ஏர் இந்தியா விமானம் 37,500 ரூபாய் என டிக்கெட்டை வெகுவாக குறைத்து இருக்கிறது. ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் இதே பயணத்திற்கு 52 ஆயிரம் ரூபாயை கட்டணமாக வசூல் செய்கிறது.
போயிங் 787 பயன்படுத்தும் பாதைகளில் விலை குறைப்பு: ஏர் இந்தியா Boeing 787 விமானங்களை பயன்படுத்தி எந்த நாடுகளுக்கு எல்லாம் செல்கிறதோ அந்த நாடுகளுக்கான டிக்கெட் கட்டணத்தை பாதிக்கும் கீழ் குறைத்து இருக்கிறது. ஏனெனில் அகமதாபாத்தில் விபத்தில் சிக்கியது இந்த வகை விமான தான் என்பதால் பயணிகள் மத்தியில் Boeing 787 விமானம் மீது அச்சம் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications