கொரோனா தொற்றுக்குப் பின்பு இந்தியாவைப் போலவே உலக நாடுகளிலும் வெளிநாட்டுப் பயணிகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்துள்ளது மட்டும் அல்லாமல் பல நாடுகளின் விமானங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. கொரோனா தொற்றுப் படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் விமானப் போக்குவரத்து சேவை மீதான தடைகளும் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில் அடுத்த சில வாரத்தில் விமானப் பயணக் கட்டணங்கள் சுமார் 40 சதவீதம் வரையில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விமானச் சேவை
இந்திய விமானச் சேவை நிறுவனங்களின் வெளிநாட்டு விமானச் சேவைக்கு மத்திய அரசு கொரோனா காரணமாகத் தடை விதித்திருந்த நிலையில், வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவில் இருந்து வெளிநாட்டு விமானச் சேவை அளித்து வந்தது.
இதனால் கட்டணத்தைத் தாறுமாறாக உயர்த்தி அதிகப்படியான லாபத்தைப் பார்த்து வந்தது.
கச்சா எண்ணெய்
இதற்கிடையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் விமான எரிபொருள் விலையும் கடுமையாக அதிகரித்தது. இதனால் விமான நிறுவனங்கள் கடுமையாகக் கட்டணத்தை உயர்த்திக் கொரோனா காலத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டி வந்தது.
மத்திய அரசு
இந்நிலையில் மத்திய அரசு மார்ச் 27ஆம் தேதி முதல் இந்திய விமான நிறுவனங்களுக்கான வெளிநாட்டுச் சேவையை அளிக்க அனுமதி கொடுத்துள்ளது. கொரோனா தொற்றுக் காரணமாகச் சுமார் 2 வருடம் சர்வதேச விமானச் சேவைகளை அளிக்க முடியாமல் முடங்கிய இருந்த இந்திய விமானச் சேவை நிறுவனங்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப உள்ளது.
கட்டணம் குறையும்
சப்ளை டிமாண்ட் பிரச்சனை காரணமாகவே விமானச் சேவை கட்டணங்கள் மிகவும் அதிகமாக இருந்தது, ஆனால் தற்போது அனைத்து விமான நிறுவனங்களும் சேவை துவங்க உள்ள நிலையில் விமானக் கட்டணம் அடுத்தச் சில வாரத்திற்குள் 40 சதவீதம் வரையில் குறைய உள்ளது.
விமான எண்ணிக்கை
மேலும் லுப்தான்சா மற்றும் சுவிஸ் விமானச் சேவை நிறுவனங்கள் அடுத்தச் சில மாதத்தில் தனது விமான எண்ணிக்கையை இரண்டு மடங்கு அதிகரிக்கத் திட்டமிட்டு உள்ளது. மேலும் சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் தனது விமான எண்ணிக்கையை 17 சதவீதம் அதிகரிக்க உள்ளது. இந்தியாவின் இண்டிகோ நிறுவனம் சுமார் 100க்கும் அதிகமான சர்வதேச விமானச் சேவைகளைத் துவங்க உள்ளது.