இந்தியாவின் அரசு விமானப் போக்குவரத்து சேவை நிறுவனமான ஏர் இந்தியா மூத்த குடிமக்களுக்குச் சிறப்புச் சலுகையாக விமானக் கட்டணத்தில் 50% சிறப்புத் தள்ளுபடி அறிவித்துள்ளது.
இந்தியாவின் உள்நாட்டு விமானச் சேவையில் 80 சதவீதம் வரையில் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, விமானப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அதிகப் பயணிகளை ஈர்க்கும் முயற்சியாக ஏர் இந்தியா தற்போது இந்தச் சலுகையை அறிவித்துள்ளது.
50 சதவீத கட்டண தள்ளுபடி
ஏர் இந்தியா தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பின் படி, 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், தங்களது விமானக் கட்டணத்தின் பேஸ் ஃபேர்-ல் சுமார் 50 சதவீதம் வரையில் தள்ளுபடி பெற உள்ளனர். மேலும் இந்தத் தள்ளுபடி சலுகை உள்நாட்டு விமானச் சேவைக்கு மட்டுமே என்பதையும் ஏர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தியக் குடிமக்களுக்கு மட்டுமே
இந்தச் சலுகை பயண நாளுக்குள் 60 வயதை அடைந்த இந்திய குடிமக்களுக்கு மட்டுமே என்பதையும், விமானக் கட்டணத்தில் பேஸ் ஃபேர்-ல் 50 சதவீதம் சலுகை பெறப் பயணிகள் குறைந்தபட்சம் 3 நாட்களுக்கு முன்னதாகவே டிக்கெட் புக் செய்ய வேண்டும் என்பதையும் ஏர் இந்தியா விளக்கமாகத் தெரிவித்துள்ளது.
போட்டோ அடையாள அட்டை
50 சதவீத கட்டண சலுகையைப் பெற வேண்டுமெனில் டிக்கெட் பதிவு செய்யும் போது தகுந்த போட்டோ அடையாள அட்டையின் நகலை பதிவேற்றம் செய்ய வேண்டும். வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ஏர் இந்தியா கொடுத்த மூத்த குடிமக்களுக்கான அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.
கட்டண விபரம்
இதேபோல் பயண நாளில் செக்-ன் செய்யும் போது குறித்த அடையாள அட்டையைக் காட்ட வேண்டும், இல்லையெனில் டிக்கெட்-க்கு முழுக் கட்டணம் வசூலிக்கப்படும், இதேபோல் டிக்கெட்டுக்கான கட்டணம் ரீப்பண்ட் செய்யப்பட மாட்டாது, வரி மற்றும் இதர கட்டணங்கள் மட்டுமே திருப்பிக் கொடுக்கப்படும் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
இதேபோல் குறித்த அடையாள அட்டையைக் காட்டாத பட்சத்தில் போர்டிங் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியா விமானங்கள்
மேலும் இந்தச் சலுகை ஏற் இந்தியா நிறுவனத்தால் இயக்கப்படும் விமானங்கள் மற்றும் அலையன்ஸ் ஏர் விமானங்களுக்கு மட்டுமே.
பிராந்திய இணைப்பு அலையன்ஸ் ஏர் விமானங்களுக்கும், ஏர் இந்தியா எக்ஸ்பிர்ஸ் உள்நாட்டு விமானங்களுக்கு இந்தச் சலுகை பொருந்தாது என ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.