இந்தியாவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ஏர் இந்தியா டாடா குழுமத்தில் அதிகப்படியான நஷ்டத்தை ஏற்படுத்தும் நிறுவனமாக இருக்கும் இதே வேளையில் இந்நிறுவனத்தின் சிஇஓவான கேம்பெல் வில்சன் தனது 5 ஆண்டு சிஇஓ பதவி முடியும் முன்னரே ராஜினாமா அறிவித்தார்.
இதனால் டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் தலைமையிலான சிறப்பு குழு ஏர் இந்தியாவுக்கான புதிய சிஇஓவை தேடும் பணியில் தீவிரமாக இறங்கிய நிலையில் தற்போது புதிய சிஇஓ தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

இதன் படி எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி டெவோல்டே கெப்ரேமரியம் என்பவரை ஏர் இந்தியா தனது புதிய தலைமை நிர்வாக அதிகாரியாகவும், நிர்வாக இயக்குநராகவும் நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது.
விமான சேவை துறையில் டெவோல்டே கெப்ரேமரியம் மிகவும் முக்கியமானவர், எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவர் ஆவார்.
மேலும் டாடா குழுமம் மத்திய அரசிடம் இருந்து ஏர் இந்தியாவை கைப்பற்றிய நாளில் இருந்து பெரும் தொகையை முதலீடு செய்து பல மாற்றங்களை நிர்வாக ரீதியாகவும், ஆப்ரேஷன்ஸ் அளவிலும் செய்துள்ளது.
ஆனாலும் கச்சா எண்ணெய் விலை உயர்வு, பாகிஸ்தான் வான் தளத்தை மூடியது, போர் அச்சம் காரணமாக விமான சேவை பாதிப்பு, குஜராத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்து என பல காரணங்களால் பெரும் இழப்பை எதிர்கொண்டு உள்ளது.
இத்தகைய சவாலாக நேரத்தில் தான் டெவோல்டே கெப்ரேமரியம் ஏர் இந்தியா-வின் சிஇஓவாக பதவியேற்கிறார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஜூலை மாதம் ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்ட செய்தியில் டெவோல்டே கெப்ரேமரியம் பாகிஸ்தான் இன்டர்நேஷ்னல் ஏர்லைன்ஸ் கார்ப் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என அறிவித்தது.
ஆனால் அடுத்த ஒரு மாத காலத்தில் மொத்த கதையும் மாறி தற்போது டெவோல்டே கெப்ரேமரியம் ஏர் இந்தியாவின் சிஇஓவாக நியமிக்கப்பட்டு உள்ளார். கடந்த 4-5 வருடத்தில் ஏர் இந்தியா நிர்வாகமும், சேவை தளமும் பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டு, அனைத்து சேவைகளும், துணை நிறுவனங்களின் இணைப்பும் முடிந்து நிலையான நிர்வாகத்தை உருவாக்கியுள்ளது.
தற்போது ஏர் இந்தியா தனது வெளிநாட்டு சேவையை விரிவாக்கம் செய்யவும், லாபகரமாக மாற்றவும் தயாராக இருக்கும் வேளையில் டெவோல்டே கெப்ரேமரியம் வந்துள்ளார். Ethiopian Airlines நிறுவனத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்து லாபகரமாக மாற்றியதில் பெரும் பங்கு கொண்டவர் இவர் என்பதால், ஏர் இந்தியா முக்கியமான கட்டத்திற்கு இவரின் தலைமையில் நுழைகிறது.


Click it and Unblock the Notifications