மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நாட்டின் முன்னணி பயணிகள் விமானச் சேவை நிறுவனமான ஏர் இந்தியத் தளத்தில் கடுமையான சைபர் அட்டாக் நடந்துள்ளதாகவும், இதன் மூலம் 45 லட்சம் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் ஏர் இந்தியா விமானத்தில் பயணித்தவர்கள் தங்களுடைய தகவல் திருடப்பட்டு உள்ளதா என்ற அச்சத்துடன் உள்ளனர். இந்நிலையில் உண்மையில் ஏர் இந்தியா தளத்தில் என்ன ஆனது..? இந்தச் சைபர் அட்டாக் மூலம் யாருக்கெல்லாம் பாதிப்பு..?!
ஏர் இந்தியாவில் சைபர் அட்டாக்
ஏர் இந்தியா பயன்படுத்தி வரும் ஜெனிவா பயணிகள் சிஸ்டம் ஆப்ரேட்டர் SITA PSS சர்வர் சைபர் அட்டாக் மூலம் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்தச் சர்வர் வாயிலாகவே ஏர் இந்தியா நிறுவனம் தனது விமானத்தில் பயணம் செய்வோரின் தனிநபர் தகவல்கள் சேமிக்கவும், பயன்படுத்தவும் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
தனிநபர் தரவுகள் திருட்டு
இந்நிலையில் ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த இந்திய மற்றும் வெளிநாட்டு விமானப் பயணிகளின் தனிநபர் தரவுகள் இந்தச் சைபர் அட்டாக் மூலம் திருடப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. ஜெனிவா பயணிகள் சிஸ்டம் ஆப்ரேட்டர் SITA PSS சர்வர் முக்கியமானது என்பதால் ஏர் இந்தியா தரவுகள் உடன் பிற நிறுவனங்களின் தரவுகளும் திருடப்பட்டு உள்ளது.
SITA PSS சர்வரில் சைபர் அட்டாக்
ஜெனிவா பயணிகள் சிஸ்டம் ஆப்ரேட்டர் SITA PSS சர்வரில் நிகழ்ந்த சைபர் அட்டாக் மூலம் ஏர் இந்தியா உடன் மலேசியா ஏர்லையன்ஸ், பின்ஏர், சிங்கப்பூர் ஏர்லையன்ஸ், லுப்தான்சா மற்றும் கேதே பசிபிக் ஆகிய விமான நிறுவனங்களின் தரவுகளும் திருடப்பட்டு உள்ளது.
யாருக்கெல்லாம் பாதிப்பு..?!
தற்போது கிடைத்துள்ள தரவுகள் அடிப்படையில் ஆகஸ்ட் 26, 2011 முதல் பிப்ரவரி 20, 2021 வரையிலான காலத்தில் நீங்கள் ஏர் இந்தியா அல்லது மேலே குறிப்பிட்ட விமானத்தில் நீங்கள் பயணித்திருந்தால் உங்கள் திருடப்பட்டு இருக்க அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
என்ன பாதிப்பு..?!
மேலும் இந்தச் சைபர் ஆட்டாக்-ல் ஏர் இந்தியா விமானப் பயணிகளின் பெயர், பிறந்த நாள், தொடர்புகொள்வதற்கான தரவுகள், கிரெடிட் கார்டு தரவு ஆகியவை திருடப்பட்டு உள்ளது. இதில் முக்கியமான மற்றும் நல்ல விஷயம் என்னவென்றால் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு-ன் CVV எண் இந்தச் சர்வரில் இல்லை என்பது தான்.
ஏர் இந்தியாவின் மின்னஞ்சல்
இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் தற்போது தகவல்கள் திருடப்பட்டுப் பாதிக்கப்பட்ட நபர்களைத் தொடர்பு கொண்டு வருகிறது. பாதிக்கப்பட்ட நபர்களில் நீங்களும் ஒருவர் என்றால் உங்கள் மின்னஞ்சல்-க்கு ஈமெயில் வந்திருக்கும். செக் செய்து பாருங்கள்.
முக்கியமான பாதிப்பு..?!
இவை அனைத்தையும் தாண்டி, இந்தச் சைபர் ஆட்டாக்-ல் பயணிகளின் பாஸ்போர்ட் விபரம், டிக்கெட் விபரங்களும் திருடப்பட்டு உள்ளதால் வாடிக்கையாளர்களைத் தங்களது ஏர் இந்தியா மற்றும் ஸ்டார் அலையன்ஸ் கணக்கின் பாஸ்வோர்டு-ஐ மாற்ற வலியுறுத்தியுள்ளது.
சைபர் அட்டாக் எதிராக விசாரணை
மேலும் ஏர் இந்தியா இந்தச் சைபர் அட்டாக் எதிராக விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை எந்தச் சைபர் அட்டாக் குழுவும் இதற்குப் பொறுப்பு ஏற்காத காரணத்தால் தொழில்நுட்ப வாயிலாக இதை மோசமான செயலை செய்தது யார் என்று கண்டுபிடிக்க முடிவு செய்துள்ளது.