இந்தியாவின் தலைநகரான டெல்லி -யில் இருக்கும் வசந்த் விஹார் காலனியில் ஏர் இந்திய ஊழியர்கள் அதிகக் காலம் தங்கியிருக்கும் நிலையில் அந்தந்த ஊழியர்களிடம் குடியிருப்பதற்கான கட்டணத்தை வசூலிக்குமாறு டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஏர் இந்தியா நிறுவனத்திடம் மத்திய அரசு கேட்டுள்ளது.
இந்தத் தொகையை அக்டோபர் மாதம் முதல் அவர்களது சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்துக்கொள்ள ஏர் இந்தியா நிர்வாகத்திற்கு மத்திய அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா அசெட் ஹோல்டிங்
இந்த நிலையில் மத்திய அரசு விற்பனை திட்டத்தில் ஏர் இந்தியாவின் குடியிருப்புக் காலனிகள் இல்லாத நிலையில் அதை ஏர் இந்தியா அசெட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் கீழ் மாற்றப்பட்டன. ஏர் இந்தியா விற்பனை போக மத்திய அரசு முதலீடு செய்த மீதமுள்ள 60,000 கோடி ரூபாயை திரட்ட இந்தக் குடியிருப்புக் காலனிகள் விற்கப்பட உள்ளது.
வெளியேற உத்தரவு
இந்த நிலையில் ஏர் இந்தியா விற்பனை செய்யப்பட்ட உடன், மத்திய அரசு ஏர் இந்தியா குடியிருப்புக் காலனிகளில் இருக்கும் ஏர் இந்தியா ஊழியர்களை இக்குடியிருப்புகளில் இருந்து வெளியேற உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து டாடா நிர்வாகமும் அனைத்து ஊழியர்களும் காலி செய்ய உத்தரவிடப்பட்டது.
58 ஊழியர்கள்
இதைத் தொடர்ந்து ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 58 ஊழியர்கள், குடியிருப்பைக் காலி செய்யும் உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
கூடுதல் அவகாசம்
குடியிருப்பைக் காலி செய்யக் கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாகக் காலனியில் உள்ள ஏர் இந்தியா ஊழியர்கள் தெரிவித்தனர். சில ஏர் இந்திய ஊழியர்கள் தங்களது குழந்தைகள் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் பள்ளி தேர்வுகளை மேற்கோள் கூடுதல் அவகாசத்தைக் கேட்டு உள்ளனர்.
சம்பளம் கட்
இந்தச் சூழ்நிலையில் தான் குடியிருப்புகளைக் காலி செய்யாத ஏர் இந்தியா ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து குடியிருப்பதற்கான தொகையைக் கழிக்க மத்திய அரசு டாடா நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில் டாடா நிர்வாகம் வழக்கின் தீர்ப்பு வரும் வரையில் காத்திருக்குமா..? அல்லது அக்டோபர் மாதத்தில் இருந்து வாடகையைத் தொகையை இந்தச் சம்பளத்தில் வசூலிக்குமா..?
டெல்லி, மும்பை
டெல்லியின் வசந்த் விஹார் மற்றும் மும்பையின் கலினா ஆகிய இரண்டு காலனிகளில் வசிக்கும் சுமார் 2,000 ஏர் இந்தியா ஊழியர்களை ஜூலை 26, 2022 க்குள் தங்கள் வீடுகளைக் காலி செய்யுமாறு மத்திய அரசு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.
அபராதம்
மேலும் காலி செய்யாவிட்டால் 10 - 15 லட்சம் ரூபாய் வரையிலான தொகையை அபராதமாகச் செலுத்த வேண்டும் என உத்தரவு வெளியிட்ட நிலையிலும் பலர் காலி செய்யவில்லை.அக்டோபர் மாதம் குடியிருப்பவர்களைக் காலி செய்யும் வகையில், குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டதாக, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.