இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் தொடர் பதற்றமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நாட்டின் முன்னணி விமான நிறுவனங்களான ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ இன்று (மே 13) ஏழு முக்கிய நகரங்களுக்கான விமான சேவைகளை ரத்து செய்துள்ளன. இந்த நகரங்களில் சில, இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த விமான நிலையங்கள், திங்கட்கிழமை நேற்று தான் பொதுமக்கள் விமானப் போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டன. இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக மீண்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பயணிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஏர் இந்தியா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜம்மு, லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், பூஜ், ஜாம்நகர், சண்டிகர் மற்றும் ராஜ்கோட் ஆகிய நகரங்களுக்குச் செல்லும் மற்றும் இங்கிருந்து புறப்படும் அனைத்து விமான சேவைகளும் மே 13ஆம் தேதி ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. மேலும், சமீபத்திய பிரச்சனைகளை கருத்தில் கொண்டும், உங்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் நிலைமையைக் கூர்ந்து கவனித்து வருகிறோம், மேலும் உங்களுக்கு உடனுக்குடன் தகவல்களை வழங்குவோம் என்றும் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
இதேபோல், இண்டிகோ நிறுவனமும் தனது பயணிகளுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஜம்மு, அமிர்தசரஸ், சண்டிகர், லே, ஸ்ரீநகர் மற்றும் ராஜ்கோட் ஆகிய நகரங்களுக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டும், உங்கள் பாதுகாப்பிற்கு நாங்கள் அதிக முன்னுரிமை அளிப்பதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது உங்கள் பயணத் திட்டங்களை எவ்வாறு பாதிக்கக்கூடும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், மேலும் ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். எங்கள் குழுக்கள் நிலைமையை தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன, மேலும் புதுப்பிப்புகள் குறித்து உடனடியாக உங்களுக்குத் தெரிவிப்பார்கள் என்றும் இண்டிகோ குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பதட்டமான சூழல் காரணமாக, முன்னதாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த 32 விமான நிலையங்களில் மே 15ஆம் தேதி வரை பொதுமக்கள் விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என்று இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) திங்கள்கிழமை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதில் ஆதம்பூர், அம்பாலா, அவந்திபூர், பதிண்டா, பிகானேர், ஹல்வாரா, ஹிண்டன், ஜெய்சல்மேர், காண்ட்லா, காங்க்ரா (ககல்), கேஷோத், கிஷன்கர், குலு மணாலி (பூந்தர்), லூதியானா, முந்த்ரா, பாட்டன்கோட், நலியா, பதான்கோட், தோய்ஸ் மற்றும் உத்தரலை ஆகிய விமான நிலையங்கள் அடங்கும்.
இந்த அறிவிப்பு, இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு வெளியானது. முன்னதாக, ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரில் நடந்த கொடிய பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்திருந்தன. இந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில், எல்லை தாண்டிய தொடர்புகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மே 7ஆம் தேதி இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையைத் தொடங்கி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) இருந்த ஒன்பது பயங்கரவாத தளங்களைத் தாக்கியது. லஷ்கர்-இ-தொய்பா (LeT), ஜெய்ஷ்-இ-முகமது (JeM) மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற பயங்கரவாத குழுக்களின் பல முகாம்களை இந்தியா அழித்ததுடன், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளையும் கொன்றது.
இந்திய ஆயுதப்படைகளின் இந்த இரவு நேர நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் இராணுவம் இந்தியாவின் மேற்குப் பகுதிகளில் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவியது. எனினும், அவை அனைத்தும் இந்தியப் படைகளால் வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டன. பின்னர், இந்தியா பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த முக்கியமான இராணுவ இலக்குகளான ரேடார் நிலையங்கள், கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் ரஃபிகி, சக்லாலா, ரஹீம் யார் கான், சுக்கூர் மற்றும் சியால்கோட் போன்ற இடங்களில் இருந்த வெடிமருந்து கிடங்குகளைத் தாக்கியது. இந்த தொடர் மோதல்களுக்குப் பிறகு, இரு நாடுகளும் சனிக்கிழமையன்று இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதற்கான போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டின. ஆனால், தற்போது விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது, எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதையே உணர்த்துகிறது. பயணிகள் பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை தற்காலிகமானதா அல்லது நீடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications