ஈரான் போர் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை பல மடங்கு உயர்ந்துவிட்டது. இரண்டு மாதமாகவே கச்சா எண்ணெய் விலைகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உச்சத்தை எட்டிய வண்ணம் இருக்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வால் விமான சேவைக்கு பயன்படுத்தக்கூடிய எரிபொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்திருக்கிறது.
பிப்ரவரி 28ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் போர் தொடங்கின. இந்தப் போர் தொடங்கி இரண்டு மாத காலம் நிறைவடைந்து இருக்கிறது. இரண்டு மாதமாக வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் சப்ளை நடைபெறவில்லை. இதன் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை பல மடங்கு பெருகிவிட்டது. இது பெட்ரோல் ,டீசல் விலை உயர்வு மட்டும் இல்லாமல் விமான எரிபொருள்களின் விலை உயர்வுக்கும் காரணமாக அமைந்திருக்கிறது.

விமான சேவை வழங்கக்கூடிய நிறுவனங்கள் தற்போது நிலைமை கைமீறி சென்றுவிட்டதாக மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்து இருக்கின்றன. மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு இந்திய விமான சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு கடிதம் எழுதி இருக்கிறது. ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் உள்ளிட்ட நிறுவனங்கள் கூட்டாக அனுப்பி இருக்கக்கூடிய இந்த கடிதத்தில் விமான எரிபொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது விமான சேவை நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றால் அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் இல்லை என்றால் விமான சேவையை இழுத்து மூட வேண்டியதிருக்கும் எனக் கூறியுள்ளன.
விமான சேவை துறை மிகப் பெரிய ஒரு சிக்கலில் தவித்து வருகிறது என குறிப்பிட்டு இருக்கும் இந்த நிறுவனங்கள் நாங்கள் நிறுவனத்தை இழுத்து மூட வேண்டியது இருக்கும், இந்தியா முழுவதும் விமான சேவைகளே நிறுத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவோம் எனக் கூறியிருக்கின்றன. உலக சந்தையில் விமான எரிபொருட்களின் விலை கணிக்க முடியாத அளவில் வேகமாக உயர்ந்து வருவதாகவும், இதனால் தங்களின் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளில் பெரிய தாக்கம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறி இருக்கின்றன.
விமான எரிபொருள் விலை ஒவ்வொரு நாளும் உயர்ந்து வருவதால் உள்நாட்டு மற்றும் சர்வதேச செயல்பாடுகள் பாதிக்கப்படுவதாக கூறியுள்ளன. குறிப்பாக சர்வதேச வழித்தடங்களில் விமானங்களை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளன. வெளிநாட்டு செயல்பாடுகளுக்கு பயன்படுத்தும் விமான எரிபொருட்களின் விலை லிட்டருக்கு 75 ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது இதனால் சில வழித்தடங்களில் எங்களால் விமான சேவையை இயக்க முடியாத நிலை உருவாகி இருப்பதாக தெரிவித்துள்ளன.
விமான எரிபொருட்களின் விலை உயர்ந்திருப்பதால் விமான சேவை வழங்குவதற்கான செலவினம் 40 லிருந்து 60% வரை உயர்ந்திருப்பதாகவும் அதனை அப்படியே பயணிகள் மீதும் சுமத்த முடியாது என தெரிவித்துள்ளனர். செயல்படவே முடியாத நிலைக்கு கொஞ்சம் கொஞ்சமாக இந்திய விமான சேவை நிறுவனங்கள் நகர்ந்து வருவதாகவும் கூறி இருக்கின்றன. மத்திய அரசு தற்காலிகமாக விமான எரிபொருட்களுக்கு சுங்க வரியை ரத்து செய்ய வேண்டும், வாட் உள்ளிட்ட வரிகளை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருக்கின்றன.


Click it and Unblock the Notifications

