சுதந்திரத்திற்குப் பின்பு இந்திய அரசு விமானச் சேவை துவங்க வேண்டும் திட்டமிட்ட நிலையில் டாடா குழுமத்தின் டாடா ஏர்லையன்ஸ் நிறுவனத்தை மொத்தமாக அரசு கைப்பற்றி ஏர் இந்தியா எனப் பெயர் மாற்றி இயங்க துவங்கியது.
இந்தக் கைப்பற்றலுக்குப் பின் ஏர் இந்தியாவின் தலைவராக JRD டாடா நீண்ட காலமாகத் தலைவராக இருந்தார். நாளிடைவில் டாடா குழுமத்திடம் இருந்த ஏர் இந்தியா பங்குகளை விற்பனை செய்த நிலையில் மொத்தமாக வெளியேறியது டாடா குழுமம்.
ஏர் இந்தியா
இந்திய அரசுக்கு சொந்தமான விமானப் போக்குவரத்து சேவை நிறுவனமான ஏர் இந்தியா அதீத கடனிலும் தொடர் நஷ்டத்திலும் இயங்கி வரும் காரணத்தால், மோடி தலைமையிலான மத்திய அரசு ஏர் இந்தியாவை விற்பனை செய்யப் பல வருடங்களாக முயற்சி செய்து வரும் நிலையில் அக்டோபர் மாதம் நடந்த ஏலத்தில் ஏர் இந்தியாவை டாடா குழுமத்தின் டேலெஸ் நிறுவனம் சுமார் 18000 கோடி ரூபாய்க்குக் கைப்பற்றியது.
69 ஆண்டுகள்
இதன் மூலம் 69 ஆண்டுகளுக்கு இந்திய அரசுக்குக் கொடுக்கப்பட்ட டாடா ஏர்லையன்ஸ் தற்போது ஏர் இந்தியா என்ற பெயருடன் மீண்டும் தாய் வீட்டுக்கு திரும்பியுள்ளது. இது டாடா குழுமத்திற்கு வரலாற்று நிகழ்வாகும், டாடா குழுமத்தைக் கட்டமைத்த முக்கியமான தலைவர்களின் ஒருவரான JRD டாடா உருவாக்கிய நிறுவனம் என்பதால் ரத்தன் டாடாவிற்கு ஏர் இந்தியா மிகவும் நெருக்கமான நிறுவனம். ஏர் இந்தியா ஏலத்தில் டாடா வெற்றிபெற்ற போதே ரத்தன் டாடா பெருமை கொண்டார்.
டாடா கைக்கு வந்தது
இந்நிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்தின் முழுக் கட்டுப்பாட்டிற்கு மத்திய அரசு கொடுத்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசுக்கும், மத்திய அரசின் நிர்வாகத்திற்கும் ஏர் இந்தியா உடன் எவ்விதமான தொடர்பும், சம்பந்தமும் இல்லை. இனி ஏர் இந்தியா நிறுவனம் இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் போன்று ஒரு தனியார் நிறுவனம் மட்டுமே.
என் சந்திரசேகரன் - மோடி சந்திப்பு
ஏர் இந்தியா நிறுவனத்தைக் கைப்பற்றும் பணியில் டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன், இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். இதன் பின்பு தான் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் மற்றும் நிதியமைச்சகம் இணைந்து ஏர் இந்தியா நிறுவனத்தின் மொத்த நிர்வாகம், சொத்துக்கள் அனைத்தையும் டாடா குழுமத்திடம் ஒப்படைத்துள்ளது.
என் சந்திரசேகரன்
இதுகுறித்து டாடா குழும நிறுவனங்களின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரான என்.சந்திரசேகரன் கூறுகையில், ஏர் இந்தியா கைப்பற்றல் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறோம், டாடா குழுமத்திற்கு மீண்டும் ஏர் இந்தியாவை அழைத்து வந்ததில் பெருமைகொள்கிறோம். உலகத் தரம் வாய்ந்த விமானச் சேவை அனைவரும் இணைந்து உருவாக்க உள்ளோம் என ஏர் இந்தியாவைக் கைபற்றிய பின்னர்ச் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
துகின் காந்த பாண்டே
மேலும் DIPAM செயலாளர் துகின் காந்த பாண்டே செய்தியாளர்களிடம் பேசுகையில், அனைத்து அரசு தரப்பு பணிகளும் முடிந்தது, ஏர் இந்தியா பங்குகளை டாடா குழுமத்தின் பெயரில் மாற்றப்பட்டு உள்ளது, டாடா குழுமத்திடம் இருந்து 18000 கோடி ரூபாய் தொகை அரசுக்கு வந்துவிட்டது. இனி ஏர் இந்தியாவின் அதிகாரப்பூர்வ உரிமையாளர் டாடா குழுமம் தான் எனத் துகின் தெரிவித்தார்.