டெல்லி : ஒரு புறம் எப்படியாவது ஏர் இந்தியாவின் பங்குகளை விற்று விட மாட்டோமா? என மத்திய அரசு அல்லாடி வருகிறது. இந்த நிலையில் ஏர் இந்தியாவுக்கு சோதனைக்கு மேல் சோதனையாக ஒவ்வொரு பிரச்சனையாக அணி வகுத்து வருகிறது.
ஏற்கனவே பெருத்த கடன் பிரச்சனையால் தவித்து வரும் ஏர் இந்தியா, எரி பொருளுக்கான கட்டணத்தை கூட கொடுக்க முடியாமல் தவித்து வருகிறது. ஏன் ஒரு சில கட்டத்தில் ஊழியர்களுக்கு சம்பளத்தையும் கொடுக்க முடியாமல் தவித்து வந்தது.
பொதுத்துறையை சேர்ந்த மிகப் பெரிய நிறுவனத்துக்கே இப்படி ஒரு நிலை என்றால், தனியார் நிறுவனங்கள் என்ன செய்ய முடியும். சரி அப்படி என்ன பிரச்சனை ஏர் இந்தியாவுக்கு. என்னவாயிற்கு என்று கேட்கிறீர்களா?
தொடர் நஷ்டம்
கடன் பிரச்சனையால் வாடி வதங்கியுள்ள ஏர் இந்தியா, ஏற்கனவே பல ஆயிரம் கோடி கடனில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த 2019ம் நிதியாண்டில் இந்த நிறுவனம் 8,556.35 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டுள்ளது. இது இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் என்றும் கூறப்படுகிறது. அதிலும் பாகிஸ்தான் வான் எல்லைகளுக்குள் இந்திய விமானங்கள் அனுமதிக்கப்படாததால், இந்திய விமானங்களுக்கு தினசரி நஷ்டம் 3 -4 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
நஷ்டத்திற்கு என்ன காரணம்?
பாகிஸ்தான் வான் எல்லைகளுக்குள் இந்திய விமானங்கள் அனுமதிக்கப்படாததால், இந்திய விமானங்களுக்கு தினசரி நஷ்டம் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இதுவும் ஒரு காரணம் என்றாலும் முக்கிய காரணம் எரிபொருள் விலையேற்றம் என்றும் கூறப்படுகிறது. மேலும் கடந்த 2007ம் ஆண்டிலிருந்து இந்தியன் ஏர்லைன்ஸூடன் இணைந்ததிலிருந்து ஏர் இந்தியாவின் நஷ்டம் இந்த அளவுக்கு உயர்ந்ததில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2018 - 2019ம் நிதியாண்டில் மிகப்பெரிய அளவில் நஷ்டம் கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நஷ்டம் தொடர்ந்து அதிகரிப்பு
ஏர் இந்தியாவின் நிகர இழப்பு கடந்த 2018 - 2019ம் ஆண்டில் 8,556.35 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. எனினும் இதுவே 2017 - 2018ம் ஆண்டில் 5,348.18 கோடி ரூபாயாக இருந்தது. ஏர் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் நஷ்டம் மற்றும் கடன் சுமையை கருத்தில் கொண்டு தான், மத்திய அரசு இந்த நிறுவனத்தின் மறுமலர்ச்சிக்காக 2012ல் அரசு 30,000 கோடி ரூபாய் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில் 2011 - 12 முதல் இன்று வரை இந்த நிறுவனம் 30,520.21 கோடி ரூபாய் ஈக்விட்டி உட்செலுத்துதலையும் பெற்றுள்ளது என்று மக்களவையில் விமானத் துறை அமச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
தனியார்மயமாக்கல் இல்லையெனில் நிறுவனத்தை மூட வேண்டும்
ஏர் இந்தியாவின் கணிசமான பங்குகளை அரசு வைத்து கொண்டு, மீதி பங்குகளை விற்க அரசு திட்டமிட்டது. ஆனால் இந்த திட்டம் கைகொடுக்காமல் போகவே அரசு ஏர் இந்தியாவை தனியார்மயமாக்கும் முடிவுக்கு வந்தது. முன்னதாக ஒர் அறிக்கையில் ஏர் இந்தியாவை தனியார்மயமாக்கா விட்டால், இந்த நிறுவனத்தை மூட வேண்டியிருக்கும் என்று பூரி கூறியிருந்தார். இதனால் பல ஆயிரம் பேர் வேலையை இழக்க நேரிடும் என்றும் கூறப்பட்டது. ஆனால்; தனியார்மயமாக்கப்படும் போது வேலையிழப்பும் இருக்காது என்றும் கூறப்பட்டது.
பாகிஸ்தான் தான் பிரச்சனை
பாகிஸ்தான் இந்திய விமான சேவைகளுக்கான வான்வெளியை மூடிய பின்னர், ஏற்கனவே நஷ்டத்தில் இருந்த பணமில்லா ஒரு நஷ்டத்தில் இருந்த நிறுவனம் 491 கோடி ரூபாய் இயக்க இழப்பை சந்தித்தது. பாலகோட் தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தான் வான்வெளியை மூடியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஏர் இந்தியா ஏற்கனவே மொத்தக் கடன் 58,000 கோடி ரூபாய் எனவும், இதுவே மொத்த இழப்பு 70,000 கோடி ரூபாய் ஏற்பட்டுள்ளதாகவும் முன்னதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா விற்பனை
ஏர் இந்தியாவின் அதிகரித்து வரும் இழப்பினை சீரமைக்க, நிதியமைச்சர் சீதாராமன் கடந்த மார்ச் மாதத்திலேயே, ஏர் இந்தியாவை விற்க இலக்கு வைத்துள்ளதாக தெரிவித்திருந்தார். ஆனால் இதை தொடங்குவதற்கு முன்பு பல தடைகள் இருப்பதாகவும் தெரிவித்தார். இதனால் ஏர் இந்தியாவில் முதலீடு செய்ய வைப்பதும் எளிதானதாக இருக்காது என்றும் அப்போது கூறியிருந்தார். இந்த நிலையில் தாம் இன்று வரை ஏர் இந்தியாவின் விற்பனை திட்டமானது கைகொடுத்ததாக தெரியவில்லை. ஏனெனில் அரசும் பல்வேறு வழிகளில்; முயன்றும் இதை வாங்க யாரும் முன்வரவில்லை என்பதே நிசப்தமான உண்மை.