சமீபத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தை கைப்பற்றிய டாடா குழுமம் தற்போது தங்களுடைய ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற்றுச் செல்லலாம் என சிறப்பு சலுகைகளை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏர் இந்தியா தனது ஊழியர்களின் ஒரு சில பிரிவினரை தானாக முன்வந்து விருப்ப ஓய்வு பெறுவதற்கு சில சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின்படி பல ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற்று செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏர் இந்தியா
ஏர் இந்தியா விமானத்தை விற்பனை செய்ய மத்திய அரசு முயற்சித்த போது அதற்கான ஏல அறிவிப்பில் டாடா குழுமம் விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்தது. டாட்டா குழுமம் அதிக தொகைக்கு ஏலம் கேட்டு இருந்ததால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஏர் இந்தியா, டாடா குழுமத்திற்கு விற்பனை செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.
டாடா குழுமம்
இதனை அடுத்து 60 ஆண்டுகளுக்கு பின்னர் ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் டாடா குழுமத்திடம் சென்றது. டாடா குழுமத்திடம் ஏர் இந்தியாவை ஒப்படைக்கும் பணிகள் நடந்து வந்தது என்பதும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி முழுமையாக டாடா குழுமத்திடம் ஏர் இந்தியா ஒப்படைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
என்.சந்திரசேகர்
டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகர் ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது தலைமையில் ஏர் இந்தியாவில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்க முடிவு செய்யப்பட்டது. குறிப்பாக விமான நிறுவனத்தின் உயர் நிர்வாகத்தை மறுசீரமைத்தார்.
விருப்ப ஓய்வு
மேலும் ஏர் இந்தியா தனது ஊழியர்களில் கணிசமான பகுதியினரை தானாக முன்வந்து ஓய்வு பெறுவதை ஊக்குவிக்கும் வகையில், ஏர் இந்தியா விருப்ப ஓய்வு பெறும் வயதை 55 இலிருந்து 40 ஆகக் குறைத்து ரொக்க ஊக்கத்தொகையை அறிவித்தது. மேலும் தற்போது 55 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் 20 ஆண்டுகள் பணி புரிந்திருந்தால், அவர்கள் விருப்ப ஓய்வு பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விருப்ப ஓய்வு பெறுபவர்களுக்கு கூடுதல் கருணைத்தொகை அளிக்கப்படும் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
கருணைத்தொகை
2022 ஆம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்கும் பணியாளர்களுக்கு ஒருமுறை நன்மையாக கருணைத்தொகை வழங்கப்படும் என்றும் ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
ஊக்கத்தொகை
மேலும் ஜூன் 1 முதல் ஜூலை 30 வரை விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்கும் ஊழியர்களுக்கு கருணைத்தொகைக்கு மேல் கூடுதல் ஊக்கத் தொகையும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்ப ஓய்வு பெற விரும்பும் பணியாளர்களின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வதும், விருப்ப ஓய்வுக்கான தேதியை மாற்றவும் ஏர் இந்தியா நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது என்றும் ஏர் இந்தியா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.