டெல்லி: மத்திய அரசுக்குச் பொதுத்துறையை சேர்ந்த விமானப் போக்குவரத்து சேவை நிறுவனமான ஏர் இந்தியா நீண்ட காலமாகவே கடுமையான கடன் நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.
சுமார் 60,000 - 70,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் சுமை இருப்பதால் ஏர் இந்தியாவால் தொடர்ந்து சரிவர இயங்க முடியவில்லை. இதனால் இந்த நிறுவனத்தின் கணிசமான பங்குகளை விற்க திட்டமிட்டது மத்திய அரசு.
மேலும் சந்தையில் நிலவி வரும் கடுமையான போட்டி, விமான எரிபொருள் விலையேற்றம், போதிய மூலதனம் இல்லாதது போன்ற காரணிகள் ஏர் இந்தியா நிறுவனம் முழுவதுமாக முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே ஏர் இந்தியாவின் பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்து நிதி திரட்டும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது.
இதனால் முதலில் ஏர் இந்தியாவின் 76 சதவிகித பங்குகளை மட்டும் விற்பனை செய்ய அறிவிப்பு வெளியான போது எவரும் வாங்க முன்வரவில்லை. இந்த நிலையில் ஏர் இந்தியாவின் முழுப் பங்குகளையும் விற்பனை செய்யும் நிலைக்கு அரசு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, ஏர் இந்தியாவை வாங்க யாரும் வராவிட்டால் இன்னும் ஆறு மாதங்களுக்குள் அதை இழுத்து மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று அந்நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்ததாக தகவல் வெளியானது. இப்படி ஒரு நிலையில் ஏர் இந்தியாவின் தலைவர் அஸ்வானி லோகானி சனிக்கிழமையன்று இந்த நிறுவனத்தினை தனியார்மயமாக்குதல் நடவடிக்கைகளை தடுப்பதற்காக பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. அவை அனைத்தும் ஆதாராமற்றவை என்றும் கூறியுள்ளார்.
மேலும் ஏர் இந்தியாவின் பணி நிறுத்தம் அல்லது நிறுவனத்தை மூடுவது தொடர்பான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். ஏர் இந்தியா தொடர்ந்து தனது சேவையினை செய்து கொண்டு தான் இருக்கும். மேலும் பயணிகள் மற்றும் கார்ப்பரேட்டுகள் அல்லது முகவர்கள், இது குறித்து கவலைப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை என்றும் ஏர் இந்தியாவின் தலைவரும் நிர்வாக இயக்குனரருமான அஸ்வானி ட்விட்டரில் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
அரசும் தொடர்ந்து ஒரு புறம் முயற்சி எடுத்து வந்தாலும் இந்த நிறுவனத்தினை வாங்க யாரும் பெரிதாக முன் வராத நிலையில், இதை சீரமைக்க அரசு இப்படி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முன்னதாக ஏர் இந்தியாவை தனியார்மயமாக்காவிட்டால் நிறுவனத்தை மூட நேரிடும் என்றும் மக்களவையில் விமானத் துறை அமச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்திருந்தது கவனிக்கதக்கது.