தன்னுடைய அதிரடியான கருத்துகளால் எதிர்கட்சியானலும் சரி, தன் சொந்த கட்சியானாலும் சரி, தவறு என்று பட்டதை தவறாமல் தட்டி கேட்கும் சுப்பிரமணிய சுவாமியை அறியாதவர் யாரும் இருக்க முடியாது.
ஏனெனில் தான் எப்போது போசினாலும் அப்படி ஒரு அதிரடியான பேச்சுக்களாலேயே அனைவரையும் ஈர்ப்பவர். அதிலும் பாரதிய ஜனதா கட்சியில் மாநிலங்களவையில் உறுப்பினராக இருக்கும் இவர், தனது சொந்த கட்சியினரையே சாடுவது வழக்கமான செயல் தான்.
இப்படி பரபர நிலையில் தற்போது ஏர் இந்தியா விற்பனை பற்றி தனது பரப்பரப்பான கருத்துகளை ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். சரி அப்படி என்ன தான் கூறி இருக்கிறார் வாருங்கள் பார்க்கலாம்.
ஏர் இந்தியா பங்குகளை விற்க முயற்சி
மத்திய அரசு தொடர்ந்து பல மாதங்களாகவே நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா விற்பனை பற்றி ஆலோசித்து வருகிறது. அதிலும் பிரதமர் மோடி முதன் முறையாக ஆட்சிக்கு வரும் போது 76% பங்குகளை அரசிடம் வைத்துக் கொண்டு, மீதமுள்ளவற்றை தனியாரிடம் விற்க உள்ளதாகவும் கூறியது. ஆனால் பெருத்த கடன் பிரச்சனையில் உள்ள ஏர் இந்தியாவை வாங்க முன் வரவில்லை.
பங்கு விற்பனை
இந்த நிலையில் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த நிலையில் மத்திய அமைச்சரவை 100 சதவிகித பங்குகளையும் விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்புதலும் பெறப்பட்டது. இந்த நிலையில் ஏர் இந்தியாவை வாங்க விருப்பம் தெரிவிக்கும் நிறுவனங்கள் வரும் மார்ச் 17ம் தேதிக்குள் விண்ணபிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தேசவிரோதம்
மத்திய அரசின் இந்த 100 பங்கு விற்பனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை, தேசவிரோத செயல் என்று பாஜகாவின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். மேலும் இதனை எதிர்த்து தான் நீதி மன்றத்தை நாட உள்ளதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையான மத்திய அரசை சாடியுள்ளார்.
பெரும் கடன் பிரச்சனை
பெருத்த கடன் பிரச்சனையில் சிக்கித் தவித்து வரும் ஏர் இந்தியா நிறுவனத்தினை 100% பங்குகளை விற்பனை செய்யாவிட்டால், நிறுவனத்தை மூட வேண்டியதை தவிர வேறு வழியில்லை என்று முன்னதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.
ஒருபுறம் இந்த பங்கு விற்பனை மோசமான விஷயமாக கூறப்பட்டாலும், இதனால் பல ஆயிரம் ஊழியர்கள் வேலை காப்பாற்றப்பட உள்ளது என்று நினைக்கும் போது எதுவும் சொல்வதற்கில்லை.