இந்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் ஏர் இந்தியா அதிகக் கடனில் மூழ்கி இருந்த காரணத்தால் ஏலத்தின் மூலம் டாடா சன்ஸ் குழுமம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் மத்திய அரசுக்கும் டாடா சன்ஸ் குழுமத்திற்கும் விற்பனை ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் ஏர் இந்தியா டாடா சன்ஸ் நிர்வாகத்தின் கீழ் முழுமையாகச் செல்ல உள்ளது.
இந்நிலையில் ஏர் இந்தியா நிர்வாகக் குழுவிற்கு டாடா சன்ஸ் முக்கியமான உத்தரவிட்டு உள்ளது.
டாடா சன்ஸ்
டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ்-ன் டேலெஸ் நிறுவனம் ஸ்பைஸ்ஜெட் உடனான போட்டியில் ஏர் இந்தியாவை வெற்றிகரமாகக் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் ஏர் இந்தியாவை முதல் நாளில் இருந்தே 100 சதவீதம் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என முடிவு செய்துள்ளது டாடா.
ஏர் இந்தியா
இந்நிலையில் ஜனவரி மாத துவக்கத்தில் அல்லது டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் டாடா சன்ஸ் ஏர் இந்தியா-வை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து முழுமையாகக் கைப்பற்ற உள்ளது. இந்நிலையில் ஏர் இந்தியா நிர்வாகக் குழுவில் இருக்கும் நிர்வாக உறுப்பினர்களைப் பதவி விலக டாடா சன்ஸ் கடந்த வாரம் உத்தரவிட்டது.
ஏர் இந்தியா நிர்வாகக் கூட்டம்
இதன் மூலம் டிசம்பர் மாதம் நடக்க இருக்கும் ஏர் இந்தியா நிர்வாகக் கூட்டத்துடன் ஏர் இந்தியா நிர்வாகக் குழுவில் இருக்கும் நிர்வாக உறுப்பினர்கள் பதவி விலக உள்ளதாகத் தெரிகிறது. தற்போது கிடைத்துள்ள தகவல் படி ஏர் இந்தியாவில் இருக்கும் 7 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வெளியேற உத்தரவிட்டுள்ளது டாடா சன்ஸ்.
7 உயர் அதிகாரிகள்
இதன் படி 4 இயக்குநர்கள், 2 அரசு தரப்பு நாமினி இயக்குநர்கள், சேர்மன், நிர்வாக இயக்குநர்கள் ஆகியோர் வெளியேற உள்ளனர், இதன் மூலம் ஏர் இந்தியா நிர்வாகக் குழு அடுத்த மாத முடிவிற்குள் முழுமையாக டாடா சன்ஸ் கைவசம் வரும். ஏர் இந்தியாவில் கடைசி நிர்வாகக் குழுக் கூட்டம் டிசம்பர் மாதத்தின் 2வது அல்லது 3வது வாரம் நடக்க உள்ளது.
இணைப்பு
இதேவேளையில் டாடா சன்ஸ் தனது ஏர் ஏசியா இந்தியா உடன் ஏர் இந்தியா எஸ்க்பிரஸ் சேவையை இணைக்கத் திட்டமிட்டு அதற்கான பணிகளையும் செய்து வருகிறது. மேலும் டாடா சன்ஸ் கட்டுப்பாட்டிற்கு வரும் ஏர் இந்தியாவின் பெயர் மாற்ற வேண்டுமா..? கூடாதா..? மக்களாகிய உங்களின் கருத்து என்ன..?