ஏர் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான AI Engineering Services Limited (AIESL) நிறுவனத்தின் பொறியாளார்கள் நாடு தழுவிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து வெளியான செய்தியில், AI Engineering Services நிறுவனத்தின், Aircraft Maintenance Engineers/Service Engineers உள்ளிட்ட ஊழியர்கள், தங்களது சம்பள குறைப்பு காரணமாக போராட்டம் நடத்தியுள்ளதாக ஏஎன்ஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பலத்த கடன் பிரச்சனைகளுக்கும் மத்தியில், ஒரு கட்டத்தில் எரிபொருட்கள் கூட வாங்க முடியாத நிலைக்கு, ஏர் இந்தியா நிறுவனம் தள்ளப்பட்டது. இந்த நிலையில் தான் இந்த நிறுவனத்தின் பங்குகளை விற்க அரசு முடிவு செய்தது.
கடன் பிரச்சனை
இதற்கான நடவடிக்கையிலும் தற்போது மும்முரமாக இறங்கியுள்ளது. விரைவில் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதற்கிடையில் ஏர் இந்தியா குழுமத்தில் அடுத்தடுத்த பிரச்சனைக்கள் அரங்கேற தொடங்கியுள்ளன. ஏற்கனவே கடன் பிரச்சனையால் தத்தளித்து வந்த ஏர் இந்தியா நிறுவனம், கொரோனாவினால் இன்னும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது.
பல அறிவிப்புகள்
ஏனெனில் மற்ற தனியார் நிறுவனங்களை காட்டிலும் ஏர் இந்தியா நிறுவனம் செயல்பட்டாலும், வழக்கமான அளவில் செயல்பாடுகள் இல்லை எனலாம். கொரோனா காலத்தில் பல நாடுகளும் விமான பயணங்களை தடை செய்தன. இந்த நிலையில் பல நிறுவனங்களும் சம்பள குறைப்பு, சம்பளமில்லா விடுமுறை என பலவற்றையும் அறிவித்தன.
ஏன் இந்த போராட்டம்?
அதெல்லாம் சரி, ஏன் ஏர் இந்தியாவின் பொறியாளர்கள் மட்டும் இந்த போராட்டத்தில் குவிந்துள்ளனர். ஏர் இந்தியாவின் இந்த சம்பள குறைப்பானது பொறியாளார்களுக்கு மட்டும் பிரத்யேகமானது என கூறப்படுகிறது. அண்மையில் மொத்த சம்பளத்தில் நிறுவனம் 20% குறைத்த நிலையில் வருங்கால வைப்பு நிதி மற்றும் வருமான வரி போன்றவற்றையும் டெபாசிட் செய்ய நிறுவனம் தவறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எங்கெங்கு போராட்டம்
இதற்கு முன்னதாக 25% சம்பளம் குறைக்கப்பட்டிருந்த நிலையில், மொத்தம் 45% சம்பளம் பொறியாளர்களுக்கு குறைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தான் ஜூலை 19 அன்று மும்பையில் போராட்டம் நடத்தப்பட்டது. இதே போன்று பெங்களூரு, டெல்லி மற்றும் கொல்கத்தாவிலும் இது போன்று போராட்டங்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து நடத்தப்பட்டன.
இது தான் கோரிக்கை
இந்த போராட்டத்தில் முழு சம்பளத்தினையும் மீட்டெடுப்பது, அலவன்ஸ்களை திரும்ப பெறுதல், நிதித்துறை தலைவரை உடனடியாக பணி நீக்கம் செய்வது உள்ளிட்ட அம்சங்களை கோரிக்கையாக வைத்துள்ளனர்.