அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தின் கடனை அடைக்க, அரசு பல வழிகளிலும் முயன்று வந்தது. ஆனால் அது எதுவும் கைகொடுக்காத நிலையில் தனியார்மயமாக்கும் முடிவுக்கு வந்தது.
இதற்கு சில ஆண்டுகளாகவே தீவிர முயற்சி எடுத்து வரும் நிலையில், கொரோனா காரணமாக விற்க முடியாமல் போனது.
கொரோனாவின் வருகைக்கு பின்னர் விமானத் துறைக்கு மிக போராட்டமான காலமாகவே இருந்தது.
மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட நிறுவனங்கள்
ஏனெனில் முற்றிலும் முடக்கப்பட்ட விமான சேவையால், நிலைகுலைந்து போன நிறுவனங்கள், அடுத்த என்ன செய்வது என தெரியாமல் தடுமாறி வந்தன. இதற்கிடையில் ஏற்கனவே பெருத்த கடன் பிரச்சனைக்கு மத்தியில் தத்தளித்து வந்த ஏர் இந்தியா, இன்னும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது எனலாம்.
பல கோடி மதிப்பில் சொத்துகள் விற்பனை
இப்படி ஒரு மோசமான நிலைக்கும் மத்தியில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையானது, அதிர்ச்சியளிக்கும் விதமாக உள்ளது. அது ஏர் இந்தியா நிறுவனம் 2015ம் ஆண்டு முதல், தனது 115 சொத்துக்களை 738 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளதாக விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் விகே சிங் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் இன்னும் பல சொத்துகள் விற்பனை செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
எதற்காக விற்பனை?
ஏர் இந்தியாவின் இந்த சொத்துகளை கடனை அடைக்க விற்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த நிறுவனம் கடந்த மார்ச் 2019ம் ஆண்டு நிலவரப்படி 60,000 கோடி ரூபாய் கடனில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதோடு ஏர் இந்தியாவின் குத்தகை வருமானம் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் இருக்கலாம் என்று தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
விற்பனை எப்போது?
ஏர் இந்தியா நிறுவனத்தின் முழு பங்கினையும் விற்க அரசு தீவிர முயற்சியினை எடுத்து வருகின்றது. எனினும் பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் இது தொடர்ந்து தாமதமாகிக் கொண்டு வருகின்றது. எனினும் அரசு தனது நிதி இலக்கினை அடைய தீவிர முயற்சியினை எடுத்து வருகின்றது. ஏலத்தில் பங்கேற்க விரும்புபவர்கள் செப்டம்பர் 15க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications