டெல்லி: கடனில் தத்தளித்து வரும் ஏர் இந்தியாவை எப்படியேனும் விற்று காசு பார்த்து விட வேண்டும் என்றும் ஒரு புறம் மத்திய அரசு அதற்குண்டான தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.
மறுபுறம் எப்படியேனும் கடனை கட்டி முடித்தால் போதும், என தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. அணைய போகும் விளக்கு பிரகாசமாகத் தான் எரியும் என்ற நிலையில் தான், ஏர் இந்தியா செயல்பட்டு வருகிறது.
ஏனெனில் இந்த நிறுவனத்தின் 100 சதவிகித பங்குகளை அரசு விற்க போவதாக கூறிய பின்பே, இந்த நிறுவனம் தீவிர முனைப்பில் செயல்பட்டு வருகிறது.
இனி கடன் கிடையாது
அரசு அமைப்புகள் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 268 கோடி பாக்கி வைத்துள்ளன என்றும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. இவற்றில் 10 லட்சத்துக்கு மேல் பாக்கி வைத்துள்ள அரசு துறைகளுக்கு, அலுவல் ரீதியான பயணத்துக்கு இனி கடனுக்கு டிக்கெட் முடியாது என்றும் ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது. ஏனெனில் ஏற்கனவே கடன் பிரச்சனையில் சிக்கித் தவித்து வரும் இந்த நிறுவனம் எரிபொருள் கட்டணத்தை கூட சரிவர செலுத்த முடியாமல் தவித்து வருவது அனைவரும் அறிந்த ஒரு விஷயமே.
கடன் பிரச்சனை
அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனம், சுமார் 60,000 கோடி கடன் பிரச்சனையில் சிக்கி தள்ளாடி வருகிறது. இதனால் இந்த நிறுவனத்தினை காப்பாற்றவும், வேலைவாய்ப்புகளை நிலை நிறுத்தவும், இதன் பங்குகளை விற்று தனியார் மயமாக்க மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
அலுவல் ரீதியான அரசு பயணம்
பொதுவாக இந்திய அரசு நிறுவன அதிகாரிகளின் அலுவல் ரீதியான பயணத்துக்கு ஏர் இந்தியாவைத் தான் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏர் இந்தியா விமான சேவை இல்லாத இடங்களுக்கு மட்டுமே, தனியார் விமானத்தில் டிக்கெட் வாங்கப்பட்டு பயணம் செய்யப்பட்டு வரப்படுகிறது. இதனால் அரசு அதிகாரிகளின் தொழில்முறை பயணங்களுக்கு ஏர் இந்தியாதான் பிரதான தேர்வாகவும் இருந்து வருகிறது.
கையிலா காசு.. மறு கையில் டிக்கெட்..
இப்படியாக கடன் மூலம் அரசு நிறுவனகளுக்கு விமான சேவை வழங்கி வந்த ஏர் இந்தியா, முதன் முறையாக காசு கொடுத்தால் தான் அரசு நிறுவனகளுக்கு டிக்கெட் என்ற அதிரடியான முடிவை ஏர் இந்தியா எடுத்துள்ளது. அரசு நிறுவனங்கள் இதுவரை, ஏர் இந்தியா நிறுவனத்துக்கு தர வேண்டிய டிக்கெட் கட்டண பாக்கி 268 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
பாக்கி வைத்துள்ள துறைகள்?
ஏர் இந்தியாவுக்கு பாக்கி வைத்துள்ள துறைகளில் சிபிஐ, மத்திய உளவுத்துறை, அமலாக்கத்துறை, சுங்க கமிஷனர்கள், மத்திய தொழிலாளர் நிறுவனம், கலால் ஆணையம், மத்திய தணிக்கை வாரியம், எல்லைப் பாதுகாப்புப் படை உள்ளிட்ட பல துறைகளும், தலா 10 லட்சத்துக்கு மேல் பாக்கி வைத்துள்ளன என்றும் கூறப்படுகிறது. இதனால் மேற்கண்ட இந்த அரசு துறைகளுக்கு டிக்கெட் வழங்க தடை விதிக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.
பாக்கியை கொடு, இல்லாவிட்டால் கட்டணம் செலுத்து?
இது வரை காசு இல்லாமல் ஒசியில் பயணம் செய்த அரசு அதிகாரிகள் இனி ஒசியில் பயணம் செய்ய முடியாது என்றும் ஏர் இந்தியா அறிவித்துள்ளது. மேலும் பாக்கியை தராவிட்டால், கட்டணம் வசூலித்த பிறகே டிக்கெட் வழங்குவது என்ற முடிவை எடுத்துள்ளதாக ஏர் இந்தியா நிறுவன அதிகாரிகள் அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
நிலுவை பட்டியல்
ஏர் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலம் மற்றும் மண்டலத்தில் இயங்கும் இந்த நிறுவனத்தின் நிதித்துறை, அரசு துறைகள் எவ்வளவு பாக்கி வைத்துள்ளன என்ற பட்டியல் தயாரிப்பில் ஏர் இந்தியா கடந்த மாதம் அதிரடியாக களம் இறங்கியது. இதை தொடர்ந்தே டிக்கெட் தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் ஏர் இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் கடந்த சில வாரங்களில் சுமார் 50 கோடி பாக்கியை வசூல் செய்துள்ளதாகவும் ஏர் இந்தியா அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.