காற்று மாசுபாடு மூலம் இந்திய நிறுவனங்களுக்கும், இந்திய வர்த்தகத்திற்கும் வருடம் சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நஷ்டம் ஏற்படுகிறது, இது கிட்டத்தட்ட இந்திய பொருளாதாரத்தின் 3 சதவீத ஜிடிபி எனப் பயமுறுத்துகிறது டால்பெர்க் அட்வைசர்ஸ்-ன் ஆய்வறிக்கை.
இந்தக் காற்று மாசுபாடு என்பது நாட்டையும் நாட்டு மக்களையும் பல வகையில் பாதிக்கும், இந்தப் பாதிப்பு நேரடியாக வர்த்தகத்தையும் , வர்த்தக நிறுவனங்களையும் மோசமான நிலைக்குக் கொண்டு செல்லும் எனவும் இந்த ஆய்வறிக்கையில் எச்சரிக்கை அளித்துள்ளது.
சரி காற்று மாசுபாடு காரணமாக இந்தியா மக்களுக்கும், இந்திய நிறுவனங்களுக்கும் என்ன பிரச்சனை.. வாங்கப் பார்ப்போம்.
காற்று மாசுபாடு ஆய்வறிக்கை
கிளீன் ஏர் பண்ட் மற்றும் CII அமைப்பு உடன் இணைந்து கன்சல்டிங்க் நிறுவனம் டால்பெர்க் அட்வைசர்ஸ் ஆய்வு செய்து வெளியிட்டுள்ள அறிக்கையில் காற்று மாசுபாடு மூலம் ஏற்படும் பிரச்சனைகளை விவரித்துள்ளது.
முக்கியப் பிரச்சனைகள்
காற்று மாசுபாடு மூலம் ஊழியர்கள் செயல்திறன் குறையும், கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் வருகை குறையும், குறைந்த வயதில் இறப்பு, சொத்துச் சேமிப்பு குறையும், மருந்து மற்றும் மருத்துவ சிகிச்சைக்கும் அதிகச் செலவுகள் செய்ய வேண்டி வரும், மக்களின் நலன் கெடும். இவை அனைத்தும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வர்த்தகத்தையும், வர்த்தக அமைப்புகளையும் கடுமையாகப் பாதிக்கும் என்றால் மிகையில்லை.
ஊழியர்கள் விடுமுறை
அவை அனைத்தையும் தாண்டி காற்று மாசுபாடு காரணமாக ஏற்படும் உடல்நல பாதிப்புகள் மூலம் ஊழியர்கள் வருடத்திற்கு 1.3 பில்லியன் நாட்கள் விடுமுறை எடுக்கும் நிலை உருவாக அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது. இதனால் இந்தியாவிற்குச் சுமார் 6 பில்லியன் டாலர் அளவிலான நஷ்டம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
ஊழியர்களின் உற்பத்தித் திறன்
இதேபோல் காற்று மாசுபாடு மூலம் ஊழியர்களின் உடல்நலம் மற்றும் குடும்பத்தின் சுகாதாரம் பாதிக்கப்படும் போது அவர்களின் செயல்திறன், உற்பத்தி திறன் ஆகியவை பாதிக்கும். இதனால் உற்பத்தி பாதிப்பது மட்டும் அல்லாமல் நிறுவனங்கள் அதிக ஊழியர்களைப் பணியில் அமர்த்த வேண்டி வரும் இதன் வாயிலாக மட்டும் சுமார் பில்லியன் டாலர் அளவிலான நஷ்டம் ஏற்படும்.
நுகர்வோர் சந்தை பாதிப்பு
மேலும் நுகர்வோர் சந்தையை எடுத்துக்கொண்டால் காற்று மாசுபாடு மோசமாக இருக்கும் போது வர்த்தகக் கடைகளுக்கும், ஷாப்பிங் மால்களுக்கும் எனப் பொருட்களை வாங்க வீட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை பெரிய அளவில் குறையும் இதனாலேயே ரீடைல் சந்தைக்கு வருடம் 22 பில்லியன் டாலர் அளவிலான வருமானம் பாதிக்கும் என இந்த ஆய்வறிக்கை.
7 லட்சம் கோடி ரூபாய் பாதிப்பு
இப்படி ஒன்றின் பின் ஒன்றாகப் பிரச்சனைகள் உருவாகும் போது இந்தியாவில் வருடத்திற்கு 95 பில்லியன் டாலர் அதாவது சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் பாதிப்பை ஏற்படும் நிலை உருவாகும் என டால்பெர்க் அட்வைசர்ஸ் நிறுவனத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது.