உலகிலேயே வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நாடாக இருக்கும் சீனாவின் வர்த்தகத்தைக் கைப்பற்றப் பல அமெரிக்க நிறுவனங்கள் பல விதமாக முயற்சி செய்து வரும் நிலையில் அனைத்தும் தொடர்ந்து தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறது.
ஒருபக்கம் உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவை விட்டு அமெரிக்க நிறுவனங்கள் வெளியேறி வரும் நிலையில், தற்போது சீனாவில் இருந்தும் ஒரு அமெரிக்க நிறுவனம் வெளியேறியுள்ளது.
என்ன காரணம் தெரியுமா..?
ஏர்பிஎன்பி
ஹோட்டல் மற்றும் விடுமுறை புக்கிங் சேவை நிறுவனமான ஏர்பிஎன்பி உலகின் பல நாடுகளில் இயங்கி வருவதைப் போலச் சீனாவிலும் தனது வர்த்தகத்தை 2016ஆம் ஆண்டு விரிவாக்கம் செய்தது. ஆசியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதி என்பதால் ஆசை ஆசையாய் வர்த்தகத்தைத் துவங்கியது.
ஜூலை 30
ஏர்பிஎன்பி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஜூலை 30ஆம் தேதி முதல் அனைத்து பட்டியல்களையும், சேவைகளையும் நிரந்தரமாக நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் சீனாவை விட்டு வெளியேறிய அமெரிக்க நிறுவனங்களின் நீண்ட நெடிய பட்டியலில் ஏர்பிஎன்பி-யும் இணைந்துள்ளது.
வீசேட்-ல் அறிவிப்பு
இந்த அறிவிப்பை ஏர்பிஎன்பி வீசேட் (Wechat) தளத்தில் தனது அதிகாரப்பூர்வ கணக்கில் தெரிவித்துள்ளது. ஆனால் எவ்விதமான காரணத்தையும் விளக்கத்தையும் ஏர்பிஎன்பி அளிக்கவில்லை. மேலும் சீன வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஏர்பிஎன்பி சேவையைப் பயன்படுத்திப் பிற நாடுகளில் ஹோட்டல் மற்றும் விடுமுறைகளைப் புக் செய்யலாம் என ஏர்பிஎன்பி தெரிவித்துள்ளது.
இண்டர்நெட்
சீனா தனது இணைய இணைப்பை உலக நாடுகள் உடன் துண்டித்து வைத்திருக்கும் காரணத்தாலும், வெளிநாட்டு நிறுவனங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிமுறைகளை நிறுவிய காரணத்தாலும் யாஹூ முதல் லிங்கிடுஇன் வரையில் பல நிறுவனங்கள் வெளியேறியுள்ளது. இந்த வரிசையில் ஏர்பிஎன்பி புதிதாக இணைந்துள்ளது.
25 மில்லியன் வாடிக்கையாளர்கள்
2016ல் இருந்து ஏர்பிஎன்பி சுமார் 25 மில்லியன் வாடிக்கையாளர்களுக்குச் சீனாவில் ஏர்பிஎன்பி சேவை அளித்துள்ளது. இந்தப் பிற வெளிநாட்டு நிறுவனங்களால் அடைய முடியாத உச்சம் என்பது பெருமையாக இருந்தாலும், சீன வர்த்தகத்திலிருந்து வெளியேறும் முடிவு கனத்த இதயத்துடன் எடுக்கப்பட்டு உள்ளது என ஏர்பிஎன்பி இணை நிறுவனர் நாதன் பிளெச்சார்சிக் தெரிவித்தார்.