அதள பாதாளத்தில் உள்ள ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் பெரும் கடன் பிரச்சனையில் தவித்து வந்த நிலையில், அவற்றை தீர்க்க ஒரே வழி கட்டண உயர்வு தான் என்ற நிலையில், பார்தி ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள், மொபைல் போன் சேவைக் கட்டணத்தை அதிகரித்துள்ளன.
இந்த கட்டண உயர்வானது நாளை முதல் அமலுக்கு வரும் என, வோடபோன், பார்தி ஏர்டெல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதே ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் கட்டண உயர்வு டிசம்பர் 6-ல் அமலுக்கு வரும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏர்டெல் கட்டண உயர்வு
பார்தி ஏர்டெல் நிறுவனம், புதிய திட்டங்களில், அன்லிமிடெட் பிரிவில், 28 நாள், 84 நாள் மற்றும் 365 நாட்களுக்கான கட்டணத்தை, 41 சதவிகிதம் உயர்த்தியுள்ளது. அதன்படி, 84 நாட்களுக்கு, தினம், 1.5 ஜி.பி., டேட்டாவுடன், நேர வரம்பின்றி பேசும் திட்டத்திற்கான கட்டணம், 31 சதவிகிதம் உயர்ந்து, 448லிருந்து, 598 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுபோல தினம், 1.5 ஜி.பி., டேட்டா திட்டத்திற்கான கட்டணம், 25 சதவிகிதம் உயர்த்தப்பட்டு, 199லிருந்து, 248 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே 356 நாட்களுக்கு 1,699 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது அது 2,398 ரூபாயாக அதிகரித்துள்ளது.
குறைந்த பட்ச கட்டணமும் உயர்வு
இதே வோடபோன், ஏர்டெல் நிறுவனங்கள், தொலைதொடர்பு இணைப்பை தக்க வைத்துக் கொள்வதற்கான குறைந்தபட்ச கட்டணத்தை 49 ரூபாயாக உயர்த்தியுள்ளன. அத்துடன், ஜியோவை பின்பற்றி, இதர தொலைதொடர்பு நிறுவன வாடிக்கையாளருடன் பேச, புதிதாக நேர வரம்பு நிர்ணயித்துள்ளன. இந்த நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்கு மேல் பேசினால், நிமிடத்திற்கு, 6 காசுகள் வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளன.
வோடபோனில் கட்டணம்
வோடபோன் ஐடியாவில் கட்டணம் 28 நாட்களுக்கு 17 ரூபாயாக இருந்தது, 299 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே 84 நாட்களுக்கு 569 ரூபாயாக இருந்தது. 699 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே 365 நாட்களுக்கு 1,699 ரூபாயாக இருந்த கட்டணம் 2,399 ரூபாயாக அதிகரித்துள்ளது. எனினும் இதில் எவ்வளவு இலவச கால்கள், டேட்டா கட்டணம் என விரிவாக கொடுக்கப்படவில்லை.
ஜியோவும் அதிகரிப்பு
இந்த சமயத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும், தொலைதொடர்பு சேவை கட்டணத்தை, 40 சதவிகிதம் வரை உயர்த்தி உள்ளது. அதேசமயம், பிற நிறுவனங்களை விட கூடுதல் பயன்கள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என, ஜியோ தெரிவித்துள்ளது. 40 சதவிகித கட்டணம் உயர்த்தப்பட்டாலும் அதைவிட 300 மடங்கு சலுகையை அறிவித்துள்ளது ஜியோ. இந்த நிறுவனத்தின் கட்டண உயர்வு, டிசம்பர் 6ல் அமலுக்கு வருகிறது.
பி.எஸ்.என்.எல்லும் உயர்த்தலாம்
இந்த தனியார் நிறுவனங்களை பின்பற்றி, பொதுத் துறையைச் சேர்ந்த, பி.எஸ்.என்.எல் நிறுவனமும் விரைவில் சேவைக் கட்டணத்தை உயர்த்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. வலுவான போட்டி, கட்டண குறைவால் ஏற்பட்டுள்ள நஷ்டம், அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை, ஐயூசி பிரச்சனை என ஒட்டுமொத்தமாக, தொலைத் தொடர்பு துறையை ஆட்டிப்படைத்து வரும் நிலையில், இதிலிருந்து மீண்டு எழவே தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இப்படி ஒரு கட்டண அதிகரிப்பை செய்துள்ளன.