கொரோனா வைரஸ் உலக கம்பெனிகளின் தலை எழுத்துக்களையே மாற்றத் தொடங்கிவிட்டது என்றால் நம்புவீர்களா?
அதெல்லாம் வெளிநாட்டில் நடக்கலாம், இந்தியாவில் நடந்து இருக்கிறாதா..? என்று கேட்கிறீர்களா.
நடந்து இருக்கிறது. ஏர்டெல் இந்தியாவின் ஆறாவது பெரிய கம்பெனியாக வளர்ந்து இருக்கிறது. எப்படி? எதன் அடிப்படையில் இந்த பட்டியல் தயாராகிறது? பார்ப்போமா?
மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்
இதை ஆங்கிலத்தில் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் என்போம். அப்படி என்றால் என்ன என்பதைப் பார்த்து விடுவோம். பங்குச் சந்தையில், பட்டியலிடப்பட்டு இருக்கும் நிறுவனங்கள் வர்த்தகமாவதைப் பார்த்து இருப்போம். அப்படி வர்த்தகம் ஆகும் பங்குகளுக்கு ஒரு விலை இருக்கும். மொத்த பங்குகள் * ஒரு பங்கின் விலை = மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்.
சந்தை மதிப்பு
இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், ஒவ்வொரு நிறுவனத்தின் மொத்த பங்குகளின் மதிப்பு (Market Capitalization) என ஒன்றைக் குறிப்பிடுவார்கள். ஒரு நிறுவன பங்கின் இன்றைய விலைக்கு, அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் விற்றால் என்ன கிடைக்குமோ அதைத் தான் மொத்த சந்தை மதிப்பு என்கிறோம். இதன் அடிப்படையில் தயாரான பட்டியலில் தான் ஏர்டெல் இன்று ஆறாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்து இருக்கிறது.
முதல் 5 இடங்கள்
1. ரிலையன்ஸ் 7.40 லட்சம் கோடி ரூபாய்
2. டி சி எஸ் 6.43 லட்சம் கோடி ரூபாய்
3. ஹிந்துஸ்தான் யுனிலிவர் 5.27 லட்சம் கோடி ரூபாய்
4. ஹெச் டி எஃப் சி பேங்க் 4.83 லட்சம் கோடி ரூபாய்
5. ஹெச் டி எஃப் சி 2.81 லட்சம் கோடி ரூபாய்... என முதல் ஐந்து இடங்களில் இந்த நிறுவனங்கள் தன் சந்தை மதிப்புகளுடன் இருக்கின்றன.
ஏர்டெல்
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சந்தை மதிப்பு இன்றைய தேதிக்கு 2.72 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து இருக்கிறது. எனவே இந்தியாவின் 6-வது பெரிய கம்பெனியாக வளர்ந்து இருக்கிறது. கடந்த ஜனவரி 16, 2020 அன்று ஏர்டெல் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2.43 லட்சம் கோடியாக இருந்ததும், அன்று இந்த பட்டியலில் 12-வது இடத்தில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது
எப்படி உயர்வு
கொரோனா வைரஸ் பாதிப்பால் பஜாஜ் ஃபைனான்ஸ், எஸ்பிஐ, ஐடிசி, கோட்டக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ பேங்க் போன்ற முன்னணி கம்பெனிகளின் பங்கு விலை எல்லாம் சரிந்துவிட்டது. ஆனால் ஏர்டெல்லின் பங்கு விலை நன்றாகவே தாக்கு பிடித்து நிற்கிறது. சொல்லப் போனால் சமீபத்தில் ஒரு நல்ல ஏற்றமும் கண்டிருக்கிறது.
6-வது இடம்
எனவே இந்தியாவின் 6-வது அதிக சந்தை மதிப்பு கொண்ட கம்பெனியாக பார்தி ஏர்டெல் இடம் பிடித்து இருக்கிறது. இந்திய டெலிகாம் வியாபாரத்தில் ரிலையன்ஸ் ஜியோவோடு போட்டு போடும் ஒரே கம்பெனி ஏர்டெல் தானே..! அதான் பங்கு விலையும் ஏறிக் கொண்டு இருக்கிறது. தவிர டெலிகாம் வியாபாரம் இந்த கொரோனா காலத்தில் பெரிதாக அடி வாங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தகக்து.
சரியலாம்
தொடர்ந்து இந்த 6-வது இடத்தை ஏர்டெல் கம்பெனி தக்க வைத்துக் கொள்வது மிகவும் சிரமமே. அப்படி ஒருவேளை பார்தி ஏர்டெல் தன் இடத்தை தக்க வைத்துக் கொள்ளுமானால், அது உண்மையாகவே பாராட்டுக்குரியது தான். இப்போதைக்கு இந்தியாவின் 6-வது பெரிய கம்பெனி என்கிற புதிய சாதனை படைத்த ஏர்டெல்லுக்கு ஒரு ராயல் சல்யூட்.